பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

251


தெரியவில்லையா? செம்பவழத்தீவு! எத்தனை இனிமையான பெயர்! மேலைக்கடலில் மூலைக்கு மூலை பரவிக்கிடக்கும் பன்னீராயிரம் 'முந்நீர்ப் பழந்தீவு' களில் அதுவும் ஒன்று.

கொத்துக் கொத்தாகக் கடலை நோக்கித் தொங்குவது போல் மேகங்கள், தீவின் பசுமை, கப்பல் செல்லும் அழகு, கடல் மகளுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசியது போல் பவழக் கொடிகள்,-ஆகிய இவற்றின் அழகில் மயங்கி அந்தக் கப்பலில் பிரயாணம் செய்வோர் யார்? எதற்காகப் பிரயாணம் செய்கின்றனர்? எங்கே பிரயாணம் செய்கின்றனர்? என்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாதல்லவா?

அதோ கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிற்கிறது. பயங்கரமான மீசையோடு காட்சியளிக்கும் ஒரு முரட்டு மீகாமன் (மாலுமி), கீழே குதித்துத் தீவின் கரையோரத்துத் தென்னைமரம் ஒன்றில் கப்பலை நங்கூரம் பாய்ச்சுகிறான். ஏதோ, தேர், திருவிழா அதிசயங்களைப் பார்க்க ஓடி வருகிறவர்களைப் போல் அந்தத் தீவின் ஆண்களும், பெண்களும், கப்பலைப் பார்க்க ஓடிவருகிறார்கள். ஆகா! அந்தத் தீவின் மக்கள்தான் என்னென்ன விநோதமான முறைகளில் உடையணிந்திருக்கிறார்கள்!

முகத்திலும், விழிகளிலும், வியப்பும், புதுமையும் இலங்கக் கப்பல் நின்ற இடத்தைச் சூழ்ந்து கொண்டார்கள் அவர்கள். மீகாமன் அவர்களை வழிவிட்டு ஒதுங்கி நின்று கொள்ளுமாறு அதட்டினான். .

இப்போது அந்தக் கப்பலிலிருந்து செம்பவழத் தீவின் கரையில் இறங்கப் போகிறவர்களைப் பார்க்கலாம்.

உள்ளேயிருப்பவர்கள் கரையில் இறங்குவதற்காகத் துக்கிக் கட்டியிருந்த மரப்படிக்கட்டைத் தணிவாக இறக்கி வைத்தான் மீகாமன்.

முதலில் குமாரபாண்டியன் இராசசிம்மன் சிரித்த முகத்தோடு கீழே இறங்கினான். தாடி மீசையோடு கூடிய பழைய துறவித் தோற்றத்துக்கும் இப்போதைய இளமைத் தோற்றத்துக்கும்தான் எவ்வளவு வேற்றுமை? அடுத்து முதல் நாள் அவனைத் தேடி இடையாற்று மங்கலத்துக்கு வந்திருந்தவர்களும் கப்பலிலிருந்து இறங்கினார்கள்.