பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

257


கையில் கொடுத்தார். அவன் அதை வாங்கி அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தான்.

பைகளை வாங்கிப் பிரித்துப் பார்த்த அந்தப் பெண் ஆச்சரியத்தால் வாய் அடைத்துப் போய் நின்றாள். பை நிறையப் பொற்கழஞ்சுகள் மின்னின. அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தலைநிமிர்ந்து பார்த்தபோது அவர்களைக் காணவில்லை.

தொலைவில் கடைவீதி திரும்பும் மூலையில் கையில் வலம்புரிச் சங்கோடு அந்த இளைஞனும் அவனோடு வந்த முதியவரும் வேகமாகச் செல்வது தெரிந்தது. அளவொத்து மேலெழும்பித் தணியும் இரு செவ்விள நீர்க்காய்கள் போல் நெஞ்சங்கள் நிமிர்ந்து தணியக் கடைவீதி மூலையைப் பார்த்துப் பெரு மூச்சுவிட்டாள் அந்தப் பெண்.


32. மதிவதனி விரித்த வலை

இருட்டி வெகுநேரமாகிவிட்டது. தென்னை மரங்களின் தோகைகள் காற்றில் ஆடும் ஓசையும், கடல் அலைகளின் இரைச்சலும் தவிரச் செம்பவழத் தீவு அமைதி பெற்றிருந்தது. பாலில் நனைத்து எறிந்த நீலத்துணி நெடுந்துரத்துக்கு விரித்துக் கிடப்பதுபோல் கடல் நிலா ஒளியில் மிக அழகாகத் தெரிந்தது. தென்னங்கீற்றுக்களிடையே நுழைந்து நிலவுக் கதிர்கள் நிழலினிடையே தரை மகளின் செம்மேனியில் தேமல் விழுந்ததுபோல் எவ்வளவு அழகாகப் பதிகின்றன?

கூடாரத்தின் வாயிலில் இராசசிம்மனும், சக்கசேனாபதி யும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். இராசசிம்மனின் மடியில் மாலையில் வாங்கிய அந்த வலம்புரிச்சங்கு இருந்தது. “சக்கசேனாபதி! இந்தச் சங்குதான் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா!” அதன் வழவழப்பான மேல் பாகத்தை விரல்களால் தடவியபடியே கூறினான் இராசசிம்மன். சக்கசேனாபதி அவன் முகத்தை உற்றுப் பார்த்து விஷமத்தனமாகக் கண்களைச் சிமிட்டினார்.