பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“சங்கு மட்டும்தானா அழகாக இருக்கிறது! அதைக் கொடுத்த..." சொல்ல வந்ததை முழுவதும் சொல்லி முடிக்காமல் மறுபடியும் சிரித்தார் அவர்.

“சரிதான்! நீங்களே என்னைக் கேலி செய்ய ஆரம்பித்து விட்டிர்களா ?”

"கேலியில்லை, இளவரசே! அந்தப் பெண் உண்மையிலேயே.”

“போதும் வருணனை! உங்களுக்குத் தலை, மீசை எல்லாமே நரைத்திருப்பது மறந்து போய்விட்டது போலிருக்கிறது.”

அவர் தன்னை வம்புக்கு இழுப்பதைத் தடுப்பதற்காக அவரையே வம்புக்கு இழுத்தான் இராசசிம்மன்.

“தலை, மீசை நரைத்து விட்டால் பெண்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று எந்த அறநூலில் சொல்லியிருக்கிறது? அந்தப் பெண் என் கைகளையா ஓடிவந்து பிடித்துக் கொண்டாள்? இளவரசருடைய வாலிபக் கைகளைத் தானே அவள் வலுவில்...”

"எவனோ அன்னக்காவடிப் பயல் ஆயிரக்கணக்கில் விலை பெறக்கூடிய சங்கைத் தூக்குகிறானே என்று பயந்துபோய்க் கையைப் பிடித்திருக்கிறாள்?”

“நியாயந்தானே ? அவளுக்குத் தெரியுமா, நீங்கள் தென்பாண்டி நாட்டு இளவரசர் என்று?”

“தெரிந்திருந்தால்...!”

“கையைப் பிடித்திருக்கமாட்டாள். அப்படியே காலடியில் விழுந்து வணங்கியிருப்பாள்!”

“அப்படியானால் தெரியாததே நல்லதாகப் போயிற்று.” இராசசிம்மன் சிரித்தான். சச்சசேனாபதி அவனுக்குப் பயந்து பெரிதாக வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

“இளவரசே! நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. இந்தத் தீவில் எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் இருக்கிறார்கள்.”

“சக்கசேனாபதி அவர்களே! மறுபடியும் நினைவூட்டுகிறேன். உங்களுக்குத் தலை நரைத்துவிட்டது. நீங்கள் இந்தப் பேச்சுப் பேசாதீர்கள்!”