பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

279

விவரித்துவிட்டு அதை அவனிடமே மறுபடியும் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

கணக்குப் பாராமல் பொற்கழஞ்சுகளை அள்ளிக்கொடுத்து வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கிய அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன், எந்த நகரத்தில் வசிப்பவன் என்ன பெயரினன் என்பவற்றையெல்லாம் அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார் மதிவதனியின் அருமைத் தந்தை.

“காவிரிப் பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு பெரிய பொன் வணிகரின் புதல்வன்” என்று அவர் நம்பும் விதத்தில் பொய் சொல்லித் தப்பித்துக்கொண்டான் குமாரபாண்டியன். மேலும் தொடர்ந்து அவர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு பொய்யாக மனத்துக்குள் உருவாக்கித் தடுமாற்றமின்றி வெளியிட்டுக் கொண்டிருந்தான் அவன். பழகிவிட்டால் பொய்யைக்கூட அழகாகச் சொல்ல முடிகிறது. மாபெரும் கற்பனைக் காவியங்களைப் படைத்த மகா கவிகளே அந்த வேலையைத் திறம்படச் செய்திருக்கும்போது தென்பாண்டித் தமிழ் இளவரசனால் மட்டும் முடியாமல் போய்விடுமா?

“திருட்டுப் பயமே இல்லாத இந்தத் தீவில் உங்களை யார் எதற்காகத் துரத்திக்கொண்டு வந்தார்கள்? அவர்களால் உங்களுக்கு எத்தகைய துன்பம் நேர இருந்தது?” என்று மதிவதனியின் தந்தை அவனைக் கேட்டபோது, “தீவின் கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தேன். என் கையிலிருந்த இந்தச் சங்கைப் பறிப்பதற்காகவோ என்னவோ, யாரோ சிலர் என்னைத் துரத்திக்கொண்டு வந்தார்கள் உங்கள் பெண் மட்டும் என்னைக் காப்பாற்றியிராவிட்டால் நான் அவர்களிடம் சிக்கிக்கொள்ள நேர்ந்திருக்கும். உங்கள் பெண் மதிவதனிக்கு நாள் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்” என்று அவரிடம் கூறினான் அவன். அப்போது அவன் கண்களின் கடையோரத்தில் மிதந்த கள்ளக் குறும்புப் பார்வை அவள்மேல் சென்றது. அந்தப் பார்வையின் விளைவாக அவள் பூத்த புன்னகை படர்ந்து இதழ்க் கோடியில் சுழித்து மறைந்தது.