பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

பாண்டிமாதேவி / முதல் பாகம்

“ஐயா, பெரியவரே! உங்கள் பெண் துணிவு மிகுந்தவள்" என்று அவளையும் அருகில் வைத்துக்கொண்டே அவரிடம் பிரமாதமாகப் புகழத் தொடங்கினான் குமாரபாண்டியன்.

“சிறு வயதிலிருந்தே தாயில்லாமல் வளர்ந்தவள். இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை. துடுக்குத்தனம் அதிகமாக இருக்கிறது. நினைவு தெரிந்து பொறுப்புவர வேண்டுமே என்றுதான் எனக்கு இடைவிடாத கவலை.”

பெரியவர் அவனிடம் குறைப்பட்டுக் கொண்டார். பேசிக்கொண்டே மூவரும் அங்கிருந்து நடந்தார்கள்.

தன் தந்தைக்குப் பக்கத்தில் துள்ளிக்குதித்து நடந்து வந்த அவள் தாய் மானுக்குப் பக்கத்தில் வரும் குட்டி மான் போல் தோன்றினாள்.

“அப்பா, முதலைக்காக வலை விரித்துக் காத்திருந்தது தான் மீதம். ஒரு முதலைகூட வரவில்லை. இந்த மனிதர் வலையில் விழுந்து நேரத்தை வீணாக்கியிராவிட்டால் ஒரு முதலையாவது தப்பித்தவறி வந்திருக்கும்.” பேசாமல் நடந்து கொண்டிருந்த அவனைப் பேசவைக்க நினைத்த மதிவதனி தன் சொற்களால் வம்புக்கு இழுத்தாள்.

“தான்செய்த குற்றத்துக்குப் பிறர்மேல் குற்றம் சுமத்துவது தான் செம்பவழத் தீவின் நடைமுறை வழக்கமோ? தலைதெறிக்க ஒடிக்கொண்டிருந்தவனை வலைக்குள் இழுத்துச் சுருக்கி மேலே துர்க்கியதுமில்லாமல் என்மேல் பழிசுறவும் செய்கிறாயே!”

“அடே அப்பா! ஒரு வார்த்தை சொல்வதற்குள் இவருக்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள் அப்பா!”

“போதும்! விளையாட்டுத்தனமாக எதையாவது பேசிக் குறும்பு செய்வதே உனக்கு வழக்கமாகப் போயிற்று.”

தந்தையின் வார்த்தைகளிலிருந்த கண்டிப்பின் கடுமை அவள் பேச்சுக்கு அணையிட்டது. மூவரும் பேசாமல் கரை யோரமாகவே நடந்தார்கள்.

“நீங்கள் எந்த இடத்துக்குப் போகவேண்டும்? உங்களுக்கு வழிதெரியாவிட்டால் நாங்கள் உடன் வந்து காண்பித்துவிட்டுப் பின்பு வீடு செல்வோம்” என்றார் பெரியவர்.