பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

281

“வேண்டாம்! நானே போய்க்கொள்வேன். அதோ கடலோரத்தில் நிற்கிறதே ஒரு கப்பல், அதற்கு அருகில் கரையில் எங்கள் கூடாரம்" என்று கூறிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்படத் தயாரானான் குமார பாண்டியன். கடைசியாக அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறை காணும் அவாவோடு அவன் கண்கள் திரும்பிய போது அவள் கண்கள் அதற்காகவே காத்திருப்பதுபோல் அவனைப் பருகிக்கொண்டிருந்தன. “இங்கிருந்து என்றைக்கு உங்கள் கப்பல் புறப்படுகிறது?” என்று பெரியவர் கேட்டார்.

“நாளை வைகறையில் நாங்கள் புறப்படுகிறோம்.”

“மறந்துவிடாதீர்கள். எத்தனையோ எண்ணங்களுக்கு நடுவே எங்களையும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். திரும்பும்போது உங்கள் கப்பல் இந்தப் பாதையாக வந்தால் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை எங்களுக்கு அளியுங்கள்”—பெரியவர் தழுதழுக்கும் குரலில் வேண்டிக் கொண்டார்.

“உங்களை நினைப்பதற்காக நான் அதிகம் துன்பப்பட வேண்டியதேயில்லை, பெரியவரே! இந்தச் சங்கு என் கையில் இருக்கிறவரையில் உங்களையும் உங்கள் பெண்ணையும் நான் நினைக்காமல் இருக்க முடியாது. இதைக் காணும்போது, தீண்டும்போது, ஒலிக்கும்போது உங்களை நினைத்து மகிழ்வேன்.”

“அதுதான் எங்களுக்குப் பெருமை! போய் வாருங்கள், வணக்கம், பெரியவரும், மதிவதனியும் கைகூப்பி வணங்கி விடை கொடுத்தனர். நீண்ட செம்மையான தாமரைப் பூக்கள் இரண்டு அளவாக, அழகாக ஒன்றுபட்டுக் குவிந்ததுபோல் குவிந்த மதிவதனியின் கூப்பிய கரங்களை, அவற்றின் காட்சியை அப்படியே தன் நினைவில் பதித்துக்கொண்டு திரும்பி நடந்தான் குமார பாண்டியன். போகும்போது கையிலிருந்த சங்கை மார்போடு அனைத்துக்கொண்டான். அவன் மனத்தில் என்ன நினைத்துக்கொண்டு அதைச் செய்தானோ? இரண்டு வழிகளிலும் சென்ற நான்கு கண்கள் சிறிது தொலைவு செல்வதற்குள் எத்தனை முறைகள் திரும்பிப் பார்த்துக் கொண்டன என்று கணக்கிட்டுச் சொல்ல இயலாது.