பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

446

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

கரையோரங்களிலுள்ள சிற்றுார்களிலும் தனித்தனிக் குழுவாகப் பிரிந்து மறைந்திருக்கிறார்கள்.”

“போதும்! நீ போய் வெளியே இரு. நாங்கள் மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினால் மட்டும் உள்ளே வா.”

சோழனுடைய குரல் கடுமையாகவும், கண்டிப்பாகவும் இருந்தது. அந்த ஒற்றன் வணங்கிவிட்டு, அங்கிருந்து வெளியேறிச் சென்றான். அவர்கள் ஐந்து பேரும் தனிமையில் மறுபடியும் ஒன்றுபட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். சற்று முன் வீராவேசமாக வாட்களை உருவி உயர்த்திச் சபதமும், உடன்படிக்கையும் செய்துகொண்டபோது இருந்த வீறாப்பு இப்போது அவர்களிடம் இல்லை. சோழன் கேட்டான்: “கொடும்பாளுர் மன்னரே! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இலங்கை மன்னனும், சேரனும் அவர்களுக்குப் படை உதவி செய்வார்களென்று நம்புகிறீர்களா?”

"நம்பாமல் எப்படி இருக்க முடியும்? குமார பாண்டியனுக்குச் சேரன் தாய்வழிப் பாட்டன் முறையினன், ஈழநாட்டுக் காசிபன் குமாரபாண்டியனைத் தன் உயிரினும் இனிய நண்பனாகக் கருதி வருகிறான். இராசசிம்மனும் காசிப மன்னனுக்கும் இந்தக் கெழுதகைமை நட்பு எப்போது, எதன் மூலம் ஏற்பட்டதென்றே தெரியவில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலைகளில் துன்பங்களும், தோல்விகளும் ஏற்படும் போதெல்லாம் இராசசிம்மனைத் தன்னிடம் வரவழைத்து இருக்கச் செய்து கொள்கிறான் ஈழ நாட்டு மன்னன். ஈழ மண்டலப் பெரும் படையின் தலைவனாகிய சக்கசேனாபதி ஒரு பழம் புலி, கடற்போரிலும் தரைப்போரிலும் பலமுறை வெற்றி பெற்ற அநுபவமுள்ளவன். ஆகவே இவர்கள் எல்லோரும் ஒன்றுசேருவதாயிருந்தால் அந்த ஒற்றுமையின் விளைவைப் பற்றி நாம் சிந்தித்தே ஆக வேண்டியிருக்கிறது” என்று மற்ற நான்கு பேர் முகங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சொன்னான் கொடும்பாளூர் மன்னன்.

“இந்த ஒற்றுமையே ஏற்பட முடியாதபடி இதைத் தகர்ப்பதற்கு நாம் முயற்சி செய்தால் என்ன?”— அரசூருடையானின் கேள்வி இது.