பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுநல் வாடை

57

“இவளுடைய பிரிவுத் துன்பம் தீரும்படியாக, அவன் பாசறையை அமைத்துக் கொண்டு இவ்வாறு திரிவதற்குக் காரணமான போர்த் தொழில் அவனுக்கு வெற்றியை உண்டாக்கி முடிவதாகுக!” என்று வேண்டிக்கொள்கிறாள் துர்க்கையைப் பரவும் பெண்.



மிகவும் அழகான ஓவியத்தைப் பாட்டிலே அமைத்துக் காட்டிவிட்டார் நக்கீரர். கூதிர்க்கால வருணனையும், அரண்மனையின் அமைப்பும், பள்ளிக் கட்டிலின் பாங்கும், பிரிவால் வாடும் பாண்டிமாதேவியின் உருவமும், பாசறையில் உள்ள பாண்டியன் செயலும் கண்முன்னே தோன்றும்படியாகக் கோலம் செய்தார்.

அதைக் கேட்டு அரசன் தான் போர்த் தொழிலிலே ஈடுபட்டு வாழ்வைப் போக்குவதால் தன் மாதேவிக்குப் பிரிவுத் துன்பம் உண்டாகும் என்பதை உணர்ந்து போர் செய்வதைக் குறைத்துக் கொள்வான் என்று எண்ணினார் நக்கீரர்.

பாட்டின் சுவையைப் புலவர்கள் பாராட்டினார்கள். அரசன் அவையில் அது அரங்கேறியது. அரசனும் அதன் சுவையை நுகர்ந்து இன்புற்றான். கவிதையைச் சுவைக்கும் அளவிலே மகிழ்ந்த அவன் நக்கீரர் கருத்தை முழுவதும் உணர்ந்து நடப்பவனாகத் தோன்றவில்லை.