பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

பாண்டியன் நெடுஞ்செழியன்

அரசன் புன்னகை பூத்தபடியே, “இப்போது புதிய போர் ஏதாவது வரப் போகிறதா, நான் பொறுமையின்றி இருக்க?” என்று கேட்டான்.

“அரசர் பிரானுடைய மரபே வீரத்துக்குப் பெயர் போனது. உலகில் பல நாடுகளைத் தம்முடைய முயற்சியால் வென்று ஏக சக்கராதிபதியாக வாழ்ந்தவர்கள் அரசர்பிரானுடைய முன்னோர்கள்.”

“நான் அப்படி உலகை ஒரு குடைக் கீழ் ஆளவில்லையே!”

“அது ஒன்றும் பெரிதன்று. மன்னர்பிரான் கோடி கோடி ஆண்டுகள் வாழவேண்டும். இப்படி அகழியும் மதிலும் உடைய பழைய நகரத்தை யார் பெற்றிருக்கிறார்கள்? பாண்டிய அரசர்களுக்குத்தான் அந்தப் பெருமை உண்டு. அந்தப் பழைய பெருமை நிலைக்க வேண்டுமானல் சில கடமைகளைச் செய்ய வேண்டும்.”

“என்ன செய்ய வேண்டும்?”

“மறுமையிலே நல்வாழ்வு வேண்டுமானாலும் சரி, இவ்வுலகத்தில் பெரும் புகழோடு தான் ஒருவனே தலைவனாக வேண்டினாலும் சரி, மன்னன் செய்வதற்குரிய செயல்கள் உண்டு.”

“அவற்றைச் சொல்லுங்கள்.”

“சொல்லத்தான் வருகிறேன். மன்னர் பெருமான் செவி சாய்த்தருள வேண்டும்.”

“நீங்கள் சொல்வது என் நன்மையின் பொருட்டுத்தானே இருக்கும்? நன்றாகச் சொல்லுங்கள். கேட்கிறேன்.”