பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பாண்டியன் நெடுஞ்செழியன்

“தம்முடைய நகரங்களிலே இருந்து, கூத்தாடும் மகளிருக்கு வளைகளையும், பாணர்களுக்கு யானைகளையும் வழங்கி, தம்முடைய நண்பர்களுக்குப் பல பொருள்களைக் கொடுத்து, காலையிலே எழுப்பும் சூதர்களுக்குத் தேரையும் குதிரைகளையும் வழங்கி, படைத் தலைவர்களுடன் இனிய குடிவகையை உண்டு, தம்மைப் பணிந்தோர் தேசங்கள் தம் ஏவலைக் கேட்டு நடக்க, பணியாதார் தேசங்களைப் பணியச் செய்து திறை கொள்வதற்காக அவர் நாட்டுக்குச் சென்று வென்ற மன்னர்கள் முன்பு பலர் இருந்தார்கள். கடல் மணலைக் காட்டிலும் பலர் பகைவரை வென்று உலகத்தை ஆண்டு பயனின்றி மாண்டார்கள்” என்று கூறும் வாயிலாக, மறுமைக்குரிய நெறியைக் கருதாமல் போரில் வெற்றி பெறுவதை மாத்திரம் எண்ணி வாழ்ந்த வாழ்க்கை வீண் என்று புலப்படுத்துகிறார்.

பிறகுதான் பாண்டி நாட்டின் வளப்பமும் மதுரை மாநகரின் சிறப்பும் வருகின்றன.

முதலில் பாண்டி நாட்டைப் பார்ப்போம். அங்கே மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலமும், வறண்டு போன பாலை நிலமும், காடும் காட்டைச் சார்ந்த இடமுமாகிய முல்லை நிலமும், வயலும் அதைச் சார்ந்ததுமாகிய மருதமும், கடலும் அதைச் சார்ந்த பகுதியுமாகிய நெய்தலும் ஆகிய ஐவகை நிலங்களும் உள்ளன. அதனாற் பாண்டியனுக்குப் பஞ்சவன். என்ற பெயர் உண்டாயிற்று. மாங்குடி மருதனார் பாண்டி நாட்டில் உள்ள ஐந்து திணைக்குமுரிய நிலங்களை வருணிக்கிறார்.