பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11 நிறைந்த வாழ்வு

மாங்குடி மருதனார் பாடிய மதுரைக் காஞ்சி தமிழ்ப் புலவருக்கு இன்பத்தை உண்டாக்கியது; பன்னூறு ஆண்டுகளாகியும் இன்றும் அது பழைய மதுரையின் வளத்தைக் காட்டிக்கொண்டு இன்புறுத்துகிறது. அது பாடப்பெற்ற அப்போதே மருதனார் எதிர்பார்த்த பயனை உண்டாக்கியது. அரசன் பன்முறை அந்தப் பாட்டைக் கேட்டான். தனக்கு அறிவுரை கூறுவதற்காகவே மருதனார் அதைப் பாடினார் என்பதை அவன் நன்கு தேர்ந்தான். சென்ற நாட்களில் சிந்தனையை ஓட்டினான். போர், போர் என்றே பல காலத்தைக் கழித்துவிட்டதை நினைந்து இரங்கினான். அறம் வளரவும் வீட்டு நெறிக்குரிய திறம் வளரவும் என்ன என்ன செய்யவேண்டும் என்று பெரியோர்களோடு இருந்து ஆராய்ந்து அவற்றைச் செய்யத் தலைப்பட்டான்.

அவனுடைய செயல்களால் குளங்களும் ஏரிகளும் செப்பம் அடைந்தது போல, உடைந்து போயிருந்த சான்றோர் உள்ளமும் புலவர் நெஞ்சமும் கவலை தீர்ந்து நிறைவடைந்தன. கருவிலே வள்ளன்மையையுடைய அரசன் தான் போரிலே பெற்ற பொருள்களை வாரி வாரி வழங்கினான். நல்ல வேள்விகளைச் செய்தான். அறத்துறைகளை வளர்த்தான். தெய்வத் திருக்கோயில்களே எடுப்பித்தான். வழிபாடுகள் சிறப்புடன் நடைபெறச் செய்தான். பலவேறு விழாக்கள் நடத்தினான்.