பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

61

அவ்வப்போது மருத்துவ சிகிச்சையை அளித்துக் கொண்டே இருந்தார்கள்.

ராஜன் பாபு, மற்றுமோர் முறை போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் பதினைந்து மாதம் சிறையில் வைக்கப்பட்டார். இந்தக் கொடுமையான சிறைத் தொல்லைகளால் அவருள்ளே இருந்த காசநோய் அதிகமாக வருத்தியது. அதற்காக அவர் தளரவில்லை. அவர் சிறை புகுந்ததைக் கண்ட பீகார் மக்கள் ஆயிரக்கணக்காக அவரைப் பின்பற்றி சிறை சென்றார்கள்.

சத்தியாக்கிரக இயக்கத்தை நசுக்க முனைந்த பிரிட்டிஷ் அவசரச் சட்டத்தால், பாபு நடத்தி வந்த ‘தேசம்’ என்ற ஹிந்திப் பத்திரிகையும் வெளிவராமல் தடை செய்யப்பட்டது. இந்தி மொழியில் அவருக்கிருந்த புலமை காரணமாக அவர் பல நூல்களை எழுதியுள்ளார். ‘சம்பரான் சத்தியாக்கிரகம் காந்திஜீ மகத்துவம்’, ‘காந்தி தத்துவம்’ முதலிய நூல்கள் அவர் எழுதியுள்ளவைகளில் மிகவும் சிறப்புடையவை. அவர் ‘லா வீக்லி’ என்ற சட்டப் பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்தார். பீகாரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘சர்ச் லைட்’ என்ற இங்கிலீஷ் பத்திரிகையின் நிர்வாகியாகவும் இருந்தார்.

இராஜன் பாபு சிறையிலே இருந்த போது 1934 - ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள், பீகார் மாகாணத்தைக் கொடிய பூகம்பம் தாக்கியது. பூமி பிளந்தது. மாளிகைகளும், வீடுகளும், கோபுரங்களும், தொழிற்சாலைகளும் மண்ணுக்குள் மூழ்கின. சில இடங்களில் திடீரென வெள்ளப் பெருக்கெடுத்தது. நகரின் முக்கிய பகுதிகள் எல்லாம் மணற்காடாகக் காட்சியளித்தன. மக்களும், கால்நடைகளும் ஏராளமாக மாண்டு மறைந்து, எங்கும் பிணவாடைகள் வீசின. வீடிழந்தோர், உறவிழந்தோர். பொருள் பறி கொடுத்தோரின் ஒலங்களால் பீகார் மாநிலம் பரிதாபமாகக் காட்சியளித்தது.