காந்தீய தத்துவப் பிரசாரம்!
காந்தியடிகளாரின் ஒத்துழையாமைப் போர் ஆரம்பமானவுடனே காங்கிரஸ் கட்சியின் கட்டளைக்குட்பட்டு ராஜன்பாபு தனது வழக்குரைஞர் பணியைத் தூக்கி எறிந்தார். அப்போது, ஒரே ஒரு வழக்குக்கு மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்று அனுமதியைப் பெற்றிருந்தார் ராஜன் பாபு!
அது லண்டன் மாநகரிலே உள்ள ப்ரிவி கவுன்சிலுக்குச் சென்று வழக்காட வேண்டிய ஒரு பெரு வழக்கு. இங்கிலாந்து நாட்டு நீதிமன்றம் சென்று அந்த வழக்கை வாதாடாவிட்டால், வழக்காளருக்கு பெருத்த பண நஷ்டமும், கெளரவக் குறைவும் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தைப் பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டி ராஜன்பாபு அனுமதி பெற்றிருந்தார். இதுபோன்ற வேறொரு வழக்கை நடத்திட பண்டித மோதிலால் நேருவுக்கு அனுமதித்துள்ளதையும் ராஜேந்திர பிரசாத் ஆதாரம் காட்டி தனது வழக்குக்குரிய அரசு அனுமதியைப் பெற்றிருந்தார்.
இராஜேந்திர பிரசாத்துக்கு அனுமதி அளித்த வழக்கு 1928- ஆம் ஆண்டில் ப்ரீவி கவுன்சில் முன்பு விசாரணைக்காக வந்தது. அவர் அதற்காக லண்டன் மாநகர் சென்றார். அங்கே இருந்த வழக்குரைஞருக்கு வாதாடுவதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தார்.