பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பாபு இராஜேந்திர பிரசாத்


அந்த வழக்கில் ராஜன் பாபுவிடம் நியாயம் இருப்பதாக எண்ணிய நீதிமன்றம், அவர் வழக்கு வெற்றி பெறும் நிலையில் தீர்ப்பளித்தது. வந்த வேலை முடிந்த ஆர்வத்தால், ராஜேந்திர பிரசாத் இங்கிலாந்து நாடு முழுவதுமாகச் சென்று சுற்றிப் பார்த்தார்.

எங்கெங்கு பாபு பயணம் செய்தாரோ, அந்தந்த இடங்களிலே எல்லாம் காந்தீய தத்துவங்களின் மேன்மைகளை எடுத்துரைத்தார். இடையிடையே இந்தியாவுக்கு ஏன் சுதந்திரம் கேட்டுப் போராடுகிறோம் என்ற காரண, காரியங்களை விரிவாகவும், விளக்கமாகவும் சொற்பொழிவாற்றி அங்குள்ள ராஜ தந்திரிகளுக்கும், கல்விமான்களுக்கும் பொதுமக்களுக்கும் புரியும்படி இந்திய நிலையை எடுத்துரைத்தார்.

இங்கிலாந்து நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்ட ராஜேந்திர பிரசாத் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார். அங்கே காந்தியடிகள் கொள்கைகள் மீதும், அவரது தத்துவங்கள் மேலும் தனிப்பட்டதோர் பற்றுக் கொண்ட அறிஞர் ரோமேன் ரோலந் என்பவரைச் சந்தித்து, இருவரும் நீண்ட நேரம் அளவளாவி மகிழ்ந்தார்கள். காந்தியடிகளது மெய்ப் பொருளை உண்மையாகவே பின்பற்றும் ஒரு காங்கிரஸ் விசுவாசி ராஜன் பாபு என்பதை அவர் உணர்ந்தார். அதனால், அவரை உளமார வரவேற்று தனது வீட்டில் விருந்துபசாரம் நடத்தி இரண்டொரு நாட்கள் தங்கவும் வைத்தார்.

அந்த நேரத்தில், அகில உலக இளைஞர்கள் மாநாடு ஒன்று பிரான்சு நாட்டிலுள்ள பாரிஸ் நகரில் நடந்தது. அந்த மாநாட்டிற்கு ராஜேந்திர பிரசாத் சிறப்பு அழைப்பின் பேரில் சென்று கலந்து கொண்டு, காந்தீய தத்துவங்களின் அடிப்படைகளை விளக்கிப் பேசினார்.