பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

71

உங்களுக்குள்ள அன்பு காரணமாகவே இன்று எனக்கு இந்த தலைவர் பதவியை நீங்கள் அளித்துள்ளீர்கள்.

நாடு, கடந்த மூன்றரை ஆண்டுகளாகப் பல தியாகங்களைச் செய்தது. துன்பமும் பெற்றது. ஆயிரக்கணக்கான இளங்காளையர்கள், மாணவர்கள், உழைப்பாளிகள், தொழிலாளிகள் ஆகியோர் தடியடிபட்டார்கள். துப்பாக்கித் தர்பாருக்கு ஆளாயினர். அபராதமும் விதிக்கப்பட்டார்கள். பலர் தம் உடல், பொருள், ஆவியை இழந்தார்கள். சிறைக்கும் சென்றார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒடுங்கிவிடவில்லை...

அவசரச் சட்டங்கள் நிரந்தரச் சட்டங்களாயின. நீதிமன்றங்களுக்கு வேலை தராமல், அதிகார வர்க்கமே அளவில்லாத அதிகாரத்தை ஏற்றது. பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டும் போடப்பட்டடன. சாதாரணச் செயல்கள் குற்றங்கள் ஆயின.

பயங்கர இயக்கத்தை நாம் அடியோடு வெறுக்கிறோம். அதனால், நாட்டின் முன்னேற்றம் தடைப்படுகிறது. கேடுகள் அதிகமாகின்றன. ஆனால் பயங்கர இயக்கத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை அடக்குமுறைகளால் நல்வழிப்படுத்த முடியாது என்பதை அரசாங்கம் கவனிக்க வேண்டும்.

“சுயராஜ்யம் அடைய நீதியும் அமைதியும் நிறைந்த வழியை மேற்கொள்வதே நம் கோட்பாடு. நீதியும் அமைதியும் நிறைந்த வழி என்றால் என்ன? சத்தியமும் அகிம்சையும் அமைந்த வழியே அது. வேறு வழியை நாம் மேற்கொண்டிருந்தால், நம் போராட்டத்தை உலகம் கவனித்திராது. இன்னும் கொடிய மிருகத்தனத்துக்கும் தீமைகளுக்கும் நாம் ஆளாகி இருப்போம்.”