பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

பாபு இராஜேந்திர பிரசாத்

ஒவ்வொரு மாகாணத்திலும் உருவான மந்திரி சபைகள் மிகத் திறமையாக நடந்து வந்தன. 1939 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தியர்களையோ, மாகாணங்களில் பதவி வகித்த காங்கிரஸ் அமைச்சர்களையோ, மந்திரி சபையையோ கலந்து யோசியாமல், பிரிட்டிஷ் வைசியராய் இந்தியாவையும் போரில் சேர்த்து விட்டார். வைசியராயின் இந்த ஆணவப் போக்கைக் கண்டிப்பதற்காக மாகாண காங்கிரஸ் மந்திரி சபைகள் தங்களது பதவிளைத் தூக்கி எறிந்து விட்டன.

காந்தியடிகள் தனிமனிதர் சத்தியாக்கிரகம் ஒன்றைத் தொடங்கினார். ஏன் இதை ஆரம்பித்தார்? சத்தியாக்கிரகத்தை ஓர் இயக்கமாக்கி அதனால் பிரிட்டிஷ் அரசுக்குத் தொல்லைகளை உருவாக்கக் கூடாது என்று அவர் எண்ணினார். அதனால் தான் - தனி மனிதர் அறப்போரை நடத்தினார். இதை உணராத எதேச்சாதிகார வெள்ளையராட்சி அறப்போர் செய்தவர்களைச் சிறையில் அடைத்தது. அதே காரணத்தைக் கொண்டு ராஜன் பாபுவையும் சிறையிலே அடைத்தது அந்த ஆட்சி.

இதனை நன்கு உணர்ந்த மகாத்மா காந்தி, இதற்கு மேல் வெள்ளையராட்சிக்கு பணிந்து போகக் கூடாது என்றெண்ணி ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற தனது கடைசி அறப்போரை 1942 ஆம் ஆண்டு துவக்கினார்.

பம்பாய் மாநாட்டில் எல்லாத் தேசியக் காங்கிரஸ் தலைவர்களும் கூடினார்கள். ராஜன் பாபுவும் செயற்குழுவில் அமர்ந்திருந்தார். வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தைக் காந்தியடிகள் அந்த மாநாட்டில் முன் மொழிந்து போராட்டக் காரண காரியங்களை விளக்கிப் பேசினார். மாநாட்டிற்கு வந்திருந்த எல்லா தேசியத் தலைவர்களும் ஒருமுகமாக ஆதரித்தார்கள். அவரவர் கருத்துக்களையும், அதனால் உருவாகும் நன்மை தீமைகளையும் வெளிப்படையாகப் பேசி, தீர்மானத்தை ஆதரித்து வரவேற்றார்கள்.