பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

பாபு இராஜேந்திர பிரசாத்

இந்தியாவில் காங்கிரசிடம் மிகுந்த பக்தி சிரத்தை கொண்ட மாகாணமென்று எனக்குத் தெரியும்.

காங்கிரஸ் அங்கு ஆடம்பரமாய் இருக்கவில்லை. ஆனால் விவசாயிகள் அனைவரும் காங்கிரசை ஆதரித்து வந்தார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கூட, பீகார் அங்கத்தினர்கள் எந்த விஷயத்திலும் ஒரு பொழுதும் மாறுபட்ட மனப்பான்மை காண்பதில்லை. இந்தப் பெரிய சபைக்கு இவர்கள் ஏன் வந்தார்கள் என்று அவர்கள் திகைத்துக் கொண்டிருப்பதைப் போல. அவர்களைப் பார்த்தால் தோன்றும். ஆனால், இரண்டு சட்ட மறுப்பு இயக்கங்களிலும் பீகார் காண்பித்த வேலைக் கணக்கு அபாரமாகும்.

பீகார் பூகம்ப நிவாரணக் கமிட்டி, இந்த நேர்த்தியான காங்கிரஸ் அமைப்பின் மூலமாக விவசாயிகளுக்கு உதவி செய்ய முடிந்தது. கிராமங்களில் வேறு எந்த அமைப்பும் இதைப் போல அவ்வளவு ஒத்தாசையாக இருக்க முடியாது. அரசாங்கத்தால் கூட ஆகாது. பீகார் காங்கிரஸ் அமைப்புக்கும் நிவாரணக் கமிட்டிக்கும் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத். அவர் பீகாரில் நிகரில்லாத் தலைவர். பார்த்தால் அசல் குடியானவன், பீகார் மண்ணோடு ஒட்டிக்கொண்டு பிறந்த திருப்புதல்வன். முதல் தடவை அவரைப் பார்த்தால் அவரைப் பற்றி ஒன்றும் பிரமாதமாகத் தோன்றாது. ஆனால், சத்தியம் பேசும் அவருடைய கூர்மையான கண்களும், சிரத்தை நிறைந்த அவருடைய பார்வையும் யாருடைய கவனத்தையும் இழுக்கும்.

அந்தப் பார்வையையும், அந்தக் கண்களையும் ஒருவரும் மறக்க முடியாது. ஏனென்றால், அந்தக் கண்களின் மூலமாக சத்தியம் உங்களைப் பார்க்கின்றது. அதைச் சந்தேகிக்கவே முடியாது.