பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

85


கிடைத்த ஓர் அரசியல் பதவியை வைத்துக் கொண்டு, அது வேண்டும், இது வேண்டுமென்று அலைந்து திரிந்து, பிறகு எது கிடைத்தாலும் பரவாயில்லை என்று தேடி அலையும் பொருட் பித்தரல்லர் பாபு!

வானளாவும் பதவி பெற்றவன் என்று அவர் இந்திய உணவமைச்சராக இருந்த போது கூறியவருமல்லர் நடந்து காட்டியவரும் அல்லர் அவர்! கொஞ்சம் அதிகமாகக் கூறுவதானால், பீகார் மாகாண முதலமைச்சர் பதவி அவரை வலியத் தேடி வந்து வற்புறுத்தியபோதும் ‘எனக்கு வேண்டாம், எனது நண்பர்களுக்கு கொடுங்கள்’ என்று கூறிய பண்புக் கோமகனாக அவர் விளங்கியதால்தான், இமயச் சிகரம் போன்ற குடியரசுத் தலைவர் பதவி அவரிடம் சரணடைந்தது. அந்தக் காலகட்டத்தில், இவரை விடச் சிறந்த பாடறிந்து ஒழுகும் பண்பாளர் எவருமில்லை என்பதும் ஒரு காரணமாகும்.

நான்தான் உயர்ந்தவன், எல்லாம் அறிந்தவன், சிந்தனையினையே நான் தான் உருவாக்கிய காலச்சிற்பி, எதையும், செய்யத் தக்கவன் என்று தருக்கித் திரிந்த செருக்குடைய முறுக்கல் புத்தி அவருக்கு எப்போதும் ஏற்பட்டதல்ல.

நிலாவின் முழு ஒளியை நானிலத்தில் பொழிந்து, அன்பெனும் வழியைக் காட்டி, மக்களிடையே நற்பண்புகளெனப்படும் அருளை எதிர்நோக்கிய அருட்சீலராக வாழ்ந்து காட்டிய அற உணர்வாளர் ராஜேந்திர பிரசாத்! அதனால்தான், குடியரசுத் தலைவரென்ற பதவி, ராஜேந்திர பிரசாத்தை நாடி வந்து, அவர்தான் அதற்கு சிறந்தவர், தக்கவர் என்று பாராட்டுதல்களைப் பெற்றுத் தரும் பொறுப்பை ஏற்றுப் பெருமையும் பெற்றது.