பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

பாபு இராஜேந்திர பிரசாத்


இராஜன் பாபு, காந்தீயத் தத்துவக் கனிகளில் ஒன்றாகப் பழுத்தவர். ஆறுவது சினம். அவ்வை அவருக்காகவே எழுதினாரோ என்னவோ கனிச் சொற்களையே பேசுவாரே தவிர, காய்ச்சொற்கள் அவரை என்றுமே கவர்ந்ததில்லை. ஆபத்தைக் கண்டு என்றுமே அஞ்சியவரல்லர். அபாயம் அவரைக் கண்டு அஞ்சிப் பதுங்கிய சம்பவங்கள் பலவுண்டு.

ஏழைகளின் துயர் கண்டு கலங்கினவர். கண்ணீர் சிதறியவர். தனது குடும்பத்தில் மரணம் அடுத்தடுத்து வந்த போதும் கதறியழுதவர் அல்லர். தேசத் தொண்டுகளிலே அடுக்கடுக்காக இன்னல்கள் வந்த போதெல்லாம் கடமைகளைச் செய்யத் தவறியவரல்லர். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது தான் ராஜன் பாபுவின் தாரக மந்திரமாக இருந்தது.

மகாத்மாவுக்குக் கூட, மாபாவி, கோட்சே தொழுத கையுடன் துப்பாக்கி ஏந்தி வந்த பகையுண்டு. ஆனால், ராஜன் பாபுவுக்கு பகையே இல்லை எனலாம். அப்படி மீறித் தள்ளாடித் தடுமாறி ஏதாவதொன்று வருமானால், அதைக் கூட தனது நகைச் சொல்லால் நகர வைத்து விடுவார். அவர் நெஞ்சு அத்தகைய ஈரமிக்க பஞ்சு.

பிரிட்டிஷ் அரசு சிறைக்கு அனுப்பும் போதெல்லாம், சில நூல்களை எழுதிக் கொண்டே வெளிவரும் சிந்தனையாளர் ராஜன் பாபு! எடுத்துக்காட்டாக சில நூல்களைக் கூறலாம். குறிப்பாகக் கூறுவதானால், பாபுவின் பிரிக்கப்பட்ட இந்தியா (Divided India) என்ற நூல், நாட்டில் பிரிவினையால் ஏற்பட்ட கேடுபாடுகளையும், தலைவர்கள் இடையே அப்போது சமரசம் கண்ட சம்பவங்களையும் மிக அழகாக, நினைவாற்றல் சின்னமாக நிலை நிறுத்தியுள்ளது எனலாம்.