பக்கம்:பாபு இராஜேந்திர பிரசாத்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

7


விவசாயியைப் போலவே அவர் ஒருக்கால் தமது நோக்கில் குறுகியவராக இருக்கலாம். நவீன உலகத்துக்குப் பொருந்தாதவர் என்று ஒருக்கால் தோன்றக்கூடும். ஆனால், அவருடைய நிகரில்லா வல்லமையும், அவரது பரிபூரண யோக்கியப் பொறுப்பும், அவரது ஊக்கமும், இந்திய விடுதலைக்காக அவர் காண்பிக்கும் பக்தியும் மிகச் சிறந்த தன்மைகளாகும். அவைகளுக்காக அவரை பீகார் மாகாணம் முழுவதும் கொண்டாடி நேசிப்பதல்லாமல், இந்தியா முழுவதுமே அவர் நேசிக்கப்படுகிறார்.

இந்தியாவில் எந்த மாகாணத்திலும், இராஜேந்திர பாபுவை பீகாரில் கொண்டாடுவது போல, ஏகமனதாக எல்லோரும் கொண்டாடக்கூடிய தலைவர் வேறு எவருமே கிடையாது. காந்தியின் தத்துவத்தை உண்மையாகவும், முழுமையாகவும் யாரேனும் ஒருவர் அறிந்து உணர்ந்திருக்கக் கூடுமானால், அது அவர்தான். அத்தகைய ஒருவர் பீகார் பூகம்ப நிவாரண வேலைக்குத் தலைமை வகிக்க நேர்ந்தது மக்களது பாக்கியமே ஆகும். அவரிடம் இருந்த நம்பிக்கையினாலேதான் இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பணம் பீகாருக்கு வந்து கொட்டிற்று.

ராஜேந்திர பாபுவிற்கு அப்போது உடம்பு சுகமே இல்லை.என்றாலும், அவர் நிவாரண வேலையில் அப்படியே யோசனையின்றிக் குதித்து விட்டார். எல்லா அலுவல்களுக்கும் அவர் மத்தியப் புள்ளி போல் விளங்கியதாலும், எல்லோரும் அவரிடம் யோசனை கேட்க வர நேர்ந்ததாலும், அவர் தமது உடல் வலிமைக்கு மீறியே உழைத்தார்.

–ஜவஹர்லால் நேரு
("ஜவஹரின் சுய சரித்திரம் பூகம்ப பகுதி
பக்கம் 843-845)