பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

பாப்பா முதல் பாட்டி வரை

ஊசி, மருந்து, மாத்திரைகள் மூலம் பெண்ணின் கருவகத்தில் பல கரு முட்டைகளை உற்பத்தி செய்ய முடியும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு கூடுகிறது.

சோதனைக் குழாய் முறையில் கரு, கருப்பையில் பதிந்து வளர்வது 20 முதல் 30 சதவீதமாக உள்ளது.

1. தற்போது பெண் குழந்தைகள் அதிக அளவில் பிறப்பதாகச் சொல்லப்படுகிறதே? காரணம் என்ன? பெண் குழந்தை பிறந்தால், பெண்ணைக் குறை கூறுவது சரியா?

டாக்டர் கமலா செல்வராஜ் : பெரும்பாலான ஆண் குழந்தைகள், கரு நிலையிலேயே சிதைந்து விடுவதும், பிறந்த பிறகு நோய் எதிர்ப்புத் தன்மை குறைவு காரணமாக, ஆண் குழந்தைகள் இறப்பதுமே, அதிகப் பெண் குழந்தைகளுக்குக் காரணம். பெண் குழந்தைகளுக்குக் கருவிலேயே எதையும் தாங்கும் சக்தி உருவாகி விடுகிறது. பிறந்து வளரும் நிலையில், நோயைத் தாங்கும் சக்தி ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு அதிகம். இந்தியாவில் ஒரு ஆண் குழந்தைக்கு மூன்று என்ற விகிதத்தில், பெண் குழந்தைகள் பிறக்கின்றன.

ஆணின் உயிர் அணுக்களில், எக்ஸ், ஒய் குரோமோசோம்கள் உள்ளன. ஆனால், பெண்களுக்கு, முட்டையில் எக்ஸ் குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். எக்ஸ்ஸும் ஒய்யும் சேரும் நிலையில், ஆண் குழந்தையும், எக்ஸ்ஸும் எக்ஸ்ஸும் சேரும் நிலையில் பெண் குழந்தையும் பிறக்கிறது. கணவனின் குரோமோசோம்கள் தான், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை இயற்கையாகத் தீர்மானிக்கிறது. எனவே, பெண் குழந்தை பிறந்தால், பெண்ணைக் குறை சொல்வது அர்த்தமற்றது.