பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

பாப்பா முதல் பாட்டி வரை

உண்டாக்கியவர்கள் யாரென்று கூற முடியாது. எந்தக் காலத்தில் அவை தோன்றின என்று கூற முடியாது. குழந்தைகளுடைய மழலையிலிருந்தே, அந்தப் பாடல்களுக்குச் சொற்களும், சந்தங்களும் ஏற்பட்டிருக்க வேண்டும்.

குழந்தைகளின் பேச்சிலே, சில தனிப்பட்ட சொற்களைக் காணலாம். சந்திரன் அவைகளுக்கு, சந்தமாமா ஆகிவிடும்; சோறு சோச்சி ஆகிவிடும். இந்தச் சொற்களெல்லாம் குழந்தைப் பாடல்களிலே இடம்பெற்று விடும்.

குருவி, காக்கை, கிளி முதலிய பறவைகளும், மாடு, நாய், குதிரை முதலிய விலங்குகளும், குழந்தைப் பாடல்களிலே அதிகமாக இடம் பெறுகின்றன. சந்திரனைப் பற்றிப் பாடுவதிலே குழந்தைகளுக்குத் தனி இன்பம் உண்டு. குழந்தைகளுடைய விளையாட்டுக்களைப் பற்றிய பாடல்களும் உண்டு. பொதுவாகக் குழந்தைப் பாடல்களெல்லாம் அவற்றின் சூழ்நிலையையும், அனுபவத்தையும், அவை கேட்கும் கதைகள் முதலியவைகளையும், அவற்றின் விளையாட்டுக்களையும் பற்றியனவாக அமைந்திருக்கும்.

பொருள் அதிகமாக இல்லாத குழந்தைப் பாடல்களோடு, பொருள் நிறைந்த பாடல்களும் உண்டு.

குள்ளக் குள்ளனை
குண்டு வயிறனை
வெள்ளிக் கொம்பனை
விநாயகனைத் தொழு

குள்ளன் என்றும், குண்டுவயிறன் என்றும் கைகளினால் காட்டி இப் பாடலைப் பாடுவதில் குழந்தைக்குத் தனிப்பட்ட விருப்பம் இருக்கிறது.

குழந்தைப் பாடல்கள் உலகமெங்கும் இருக்கின்றன. வேறு உயர்ந்த இலக்கியம் இல்லாத மொழிகளிலும், எழுத்து வடிவமே காணாத மொழிகளிலும் குழந்தைப் பாடல்கள் உண்டு.