பக்கம்:பாப்பா முதல் பாட்டி வரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

பாப்பா முதல் பாட்டி வரை

ஏனெனில் இறுதி மாதவிடாய்க்குப் பின்னர் கருவகங்கள் (ovaries) சுருங்கி இருக்க வேண்டும். அதுபோன்ற நேரங்களில் கருவகங்களில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதைத் துவக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால், சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடலாம். ஆனால், நோய் முற்றிய பின்னரே பலர் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதைத் தவிர்க்க, மாதவிலக்கு முடிந்த பின்னர், ஆண்டுக்கு ஒரு முறை கருவகங்களை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து பார்ப்பது அவசியம்.

ஆணா, பெண்ணா? : ஸ்கேன் வந்த புதிதில், பல இடங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவியை, ஆணா, பெண்ணா எனப் பார்க்கும் கருவி என்று சொல்வார்கள். கருத்தரித்த 3 மாதத்தில் இருந்து 4 மாத காலத்துக்குள் ஆணா,பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கு முன்பே கூட வேறு வழிகளில் கண்டு பிடிக்கலாம். குழந்தையைச் சுற்றியுள்ள நீரை எடுத்து கல்ச்சர் பண்ணி எக்ஸ் மரபணு ஒய் மரபணுக்களைக் கொண்டும் சொல்லலாம்.

ஆனால், தாய், மற்றும் குழந்தையின் குறை நிறைகளைக் கண்டுபிடிக்கவே, ஸ்கேனைப் பயன்படுத்த வேண்டும். அக் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில், என்ன குழந்தை என்று சொல்லுமாறு வற்புறுத்துவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கேட்காவிட்டாலும், அவர்களது மாமியார் வந்து கேட்பார். ஆனால் மனித நேய அடிப்படையிலும், அரசு சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்டும், என்ன குழந்தை என்று சொல்லக்கூடாது. ஆண் குழந்தையை விரும்பும் பெண்ணிடம், பெண் குழந்தை என்று 3 மாதத்திலேயே சொன்னால், மனரீதியாக அப்பெண் பாதிப்படைவார்.