உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

157

முடியாமல் இருக்கும் நிலையில் கருத்துக்களைச் சொல்வதற்கு எந்த அளவுக்கு உரைநடையின் எல்லைகள் விரிந்து கொடுக்கக்கூடும் என்று சோதனைகள் செய்து பார்ப்பதுதான் ஒவ்வொரு உரைநடை எழுத்தாளனது முயற்சியாக இருக்க வேண்டும்.” இது சி. சு. செல்லப்பாவின் அபிப்பிராயம்.

‘இன்று தேவையான உரைநடை’ என்றொரு கட்டுரையை அவர் எழுதியிருக்கிறார். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்—

“உரைநடை ஒரு படைப்பாளியின் சொந்தக் குரல். தொனி. அது அவன் கருத்துக்கு ஏற்ப தொனிக்கும், ஒலி கிளப்பும், நீடிக்கும், மாறும், ஏறும், இறங்கும். அந்தக் கருத்தைப் பொறுத்த மணத்தைத்தான் நாம் அதில் காண முடியும். ‘நீ பேசுவது இனிப்பாக இல்லை’ என்று நான் எழுதினால் நான் ஒன்றில் நினைத்து மற்றொன்றில் எழுதிய குற்றத்துக்கு உள்ளாவேன். ஆனால், ‘அட நீ பேசறது இனிக்கிற பேச்சா இல்லியே?’ என்று ஒரு கிராமவாசி மற்றொருவரிடம் கூறும் போது? இங்கிலீஷ் படிக்காதவரும் தங்கள் கருத்துக்களை எல்லாம் தெரிவிக்க வார்த்தை, வாக்கிய அமைதிகளை எப்படியெல்லாம் உபயோகிக்கிறார்கள் என்பதைக் கவனித்தால் இந்த மாதிரி பேச்செல்லாம் கிளம்பாது.

“இன்றைக்குத் தேவையான உரைநடை, அற்பமான மனம் சாய்ந்த கருத்துக்களுக்கு மேலாக எழுந்து, வெளியிட வேண்டிய பொருளுக்கும் வெளியீட்டு சக்திக்கும் ஏற்ப, தொற்ற வைத்தலையே முதன்மை நோக்கமாகக் கொண்டு, முன் படைக்கப்பட்டுள்ள அத்தனை வித உரைநடைகளையும் மனதில் கொண்டு, அவைகளில் தனக்கு உபயோகமாகக் கூடிய அளவு போக, போதாதற்கு சோதனை நடத்தி ஒரு படைப்பாளி கையாள வேண்டிய உரைநடைதான்.”