உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் உரைநடை

185

காணலாம். அறிவு பூர்வமாக மட்டுமல்ல; உணர்வு பூர்வமாகக் கூட மனிதன் நல்லதையே நாடுகிறான். இதைச் சாதாரண சமூகவாழ்க்கையில் சகல கோணங்களிலும் நான் தரிசிக்கிறேன். நான் எப்படித் தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும் முயற்சியே எனது கதைகள். இந்த எனது நோக்கத்தை ஓர் அர்த்தம் என்று கொண்டால் எனது கதைகளை எல்லாம் அந்த அர்த்தத்தின் பல உருவங்கள் என்று கொள்ளலாம்.”

ஜெயகாந்தன் தனது கதைகளுக்குப் பொருளாக எடுத்துக் கொள்கிற வாழ்க்கைப் பிரச்னைகளும் அவற்றைத் தனது அனுபவ தரிசனம் மூலம் எடுத்துச் சொல்கிறவிதமும் அவருடைய சிந்தனை அவற்றுக்கு ஏற்றுகிற மெருகும், அவருடைய அழுத்தமான நம்பிக்கைகளும் துணிச்சலான வெளியீடுகளும் அவற்றுக்குத் தருகிற கனமும் அவரது உரைநடைக்கு உயிரும் உணர்வும் தனித் தன்மையும் சேர்க்கின்றன.

பிரச்னைகள் சம்பந்தமான ஜெயகாந்தன் சிந்தனை ஒன்றை இங்கே எடுத்தெழுதுவது பொருத்தமாக இருக்கும்—

“இவை கதைகள்! அதாவது மனிதன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாபமுறுகிறேன். பிரச்னைகளுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன்.

ஆனால் உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்லி வைக்கிறேன். வாழ்க்கை (life) என்பது வாழ்வின் (existence) பிரச்னை; வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்னை; கலையும் இலக்கியமும் வளர்ச்சியின் பிரச்னைகள். எனது கதைகள் பொதுவாக, பிரச்னைகளின் பிரச்னை!

பா—12