68
பாரதிக்குப் பின்
களில் சற்று நடந்தால் யாரும் துறவியாகிவிடலாம். துணிகளுக்குக் காவி போடவேண்டிய அவசியமே இல்லை. இதனாலேதான், சுவாமிகள், சந்நியாசிகள், சந்நிதானங்கள் முதலியோர் மாயவரத்தைத் தேடிப்போவது வழக்கம்.”
வாசகருக்கு சிரமம் அளிக்காத விதத்தில், நேரடியாகக் கதை சொல்லும் கலையைக் கல்கி வளர்த்தார். சோதனை, புதுமை என்று அவர் உரைநடையில் சொல் ஜாலங்கள் செய்ய ஆசைப்படவில்லை. உவமைகளில் கூட பழகிப்போன புராதன முறைகளையே அவர் கையாண்டிருக்கிறார். விவரங்களை சுவையாக வர்ணித்தார். அதனால் கல்கியின் எழுத்துகளுக்கு மிக அதிகமான ரசிகர்கள் சேர்வது சாத்தியமாயிற்று.
கல்கி கதை சொல்லும் பாணிக்கு ஒரு சிறு உதாரணமாக, அவருடைய ‘பவானி பி.ஏ.,பி. எல்’ என்ற கதையிலிருந்து ஒரு விவரிப்பை இங்கே தருகிறேன்.
“ஸ்ரீமதி பவானி பி.ஏ., பி. எல். என்றைய தினம் ஹைகோர்ட்டில் அட்வகேட்டாகப் பதிவு செய்யப்பட்டாளோ, அன்று முதல் ஹைகோர்ட்டு கட்டிடமே ஒரு புதிய களையுடன் விளங்கிற்று. பிரம்மஹத்தி கூத்தாடிய வேலையற்ற வக்கீல்களின் முகத்திலே கூட ஒரு புதிய தேஜஸ் பிறந்தது. ஊமைக் கோட்டான் போலிருந்த ஜட்ஜுகள் எல்லாம் கொஞ்சம் கலகலப்பாய்ப் பேச ஆரம்பித்தார்கள். தஸ்தவேஜீக் கட்டுகளைப் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போன கோர்ட் குமாஸ்தாக்களின் கண்கள் ஒரு புதிய பிரகாசம் பெற்று அங்கும் இங்கும் நோக்கி விழித்தன. அந்தக் கண்கள், குறுக்கே நெடுக்கே எங்கே யாவது ஸ்ரீமதி பவானி போகிறாளோ என்று தான் அப்படித் திறுதிறு வென்று விழித்தன எனறு சொல்ல வேண்டியதில்லை.