பக்கம்:பாரதித் தமிழ்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

பாரதி தமிழ்



இன்பமில்லையா?

பராசக்தி, இந்த உலகத்தின் ஆத்மா நீ.

உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக்கூடாதா?

முதலாவது, எனக்கு என்மீது வெற்றி தர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய்விட்டது. இரண்டு மாத காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழுத்துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை- இருவருக்கும். உறக்கம் நேரே வரவில்லை-இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தி, உன்னை நம்பித்தானிருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய். உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம்-தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தி, ஒயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து, தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட்பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்யவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/42&oldid=1539896" இலிருந்து மீள்விக்கப்பட்டது