உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

வீரமிலா நாய்கள், விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?

வீரமிலா நாய்கள் என்று ஊர்மக்களைப் பழிக்கின்றார். துச்சாதனன் இளவரசனா? அவன் ஒரு விலங்கு என்றும், பெரும் மூடன் என்றும் சீறுகின்றார்.

“ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்றும், “அணுவளவு பெண்களை உயர்த்தியும் சொல்லலாம்” என்றும் கூறியவரல்லவா பாரதியார்!

ஆகவே, தாய்மொழி, தாய்க்குலம் என்று வரும் இடத்தைத் தவிரப் பாரதியார் அவ்வளவு பெருங்கோபம் கொண்டதாகக் கூறுவதற்கில்லை. (தமிழைப் பற்றித் தாழ்வாக உரைத்துவிட்ட ஸ்ரீ நீலகண்டய்யரின் மீது எவ்வளவு கடுங்கோபம் வந்தது என்பதைத் தமிழ் என்ற கட்டுரையிலே பார்த்தோம்.) கவிதைகளிலும் உரைநடைகளிலும், நகைச்சுவை கொப்பளிக்கப் பாரதியார் எழுதுவதிலே வல்லவர் என்று இதுவரை காட்டியுள்ள மேற்கோள்களால் விளங்கும். நகைச்சுவை என்றால் ஒருதடவை சிரித்துவிட்டுப் போகக்கூடியதல்ல. பாரதியாருடைய நகைச்சுவை எப்பொழுதும் இன்பம் அளிப்பதாகும். இந்த நகைச்சுவைதான் பாரதியாரைக் கொடிய வறுமை பிலும் காத்திருக்கின்றது என்பதை அறியலாம்.

நமக்குத் தொழில் கவிதை
நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்

என்பது பாரதியார் வாக்கு.