30
போனாள். ராயர் வீட்டு அம்மாள் குடக்கூலிக்கு ஞாபகப் படுத்தச் சொன்னாள் ராயர் நேற்றே சொன்னாராம். இந்த மாதம் குழந்தைக்குக் காப்பு வாங்க ரூபாய் தருவதாகச் சொல்லியிருந்தீர்கள். என்னைத்தான் ஏமாற்றுகிறது வழக்கமாகவே போய்விட்டது'; இன்னும், அது இது என்று ஆயிரம் கணக்கு சொன்னாள். அன்று மாலை அவள் சொல்லிய கணக்குகளை எல்லாம் தீர்க்க வேண்டுமானால் குறைந்த பக்ஷம் மூன்று லக்ஷம் ரூபாய் வேண்டும் என்று என் புத்திக்குப் புலப்பட்டது. கடைசியாக, தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரியிறைக்கிறது; வீட்டுச் செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது; இப்படிச் செய்துகொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண்தான் கிடைக்கும். என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.
'தலைநோவு தீர்ந்து போய்விட்டது. நீ தயவு செய்து கீழே போகலாம்' என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்.
'ஆமாம்! ஊர்க்காரர் கூடவெல்லாம் ஓயாமல் பேசித் தொண்டைத் தண்ணீரை வற்ற வைத்துக் கொண்டிருக்கலாம். நான் ஒரு வார்த்தை பேசவந்தால் உடனே கோபம் வந்துவிடும்' என்றாள். அவள் மனதில் என்னை ஸமாதானப் படுத்துவதாக எண்ணம். அப்பால், பல தினங்கள் கழிந்த பின்புதான், நான் தர்மலோக யாத்திரை செய்வதாகத் தீர்மானம் செய்து வைந்திருந்தேன். இடையே நிகழ்ந்த சிற்சில ஸம்பவங்களும் காலதேச வர்ணனைகளுமே இங்கே எழுதப்படும். மண்ணுலகம் மிகப்பெரிது. அதில் என் அனுபவம் முழுவதையும் எழுத வேண்டுமானால் மஹா பாரதத்தைப்போலப் பதினெட்டு மடங்கு புஸ்தகமாகும் இங்கு ஓரிரண்டு 'மாதிரி ஸீன்'களே குறிப்பிடப்படும்.