37
நான் உன்னை இங்கே கொணர்வித்தேன். நீ பயப்படுகிற அளவு ஆற்காட் நவாப்கூடப் பயந்தது கிடையாது. ஆற்காட் நவாப் ஸங்கதி தெரியுமா? கிளைவ் ஒரு வாயில் வழியே கோட்டைக்குள் புகுந்து பார்த்தபோது, நவாப் மற்றொரு வாயில் வழியே வெளியேறி விட்டாராம்.உள்ளே போனால் க்ளைவ் யாருடன் சண்டை போடுவார்? அவர் பாட்டிலே போய் ஷோக்காகக் கோட்டைக்குள் பீரங்கி ஸஹிதமாக இருந்துகொண்டு, கோட்டை கொத்தளங்களைச் சீராக்கித் தான் அதை வைத்துக் கொண்டாரென்று கேள்வியுற்றதுண்டு. நீ அந்த ஆற்காடு நவாபினிட மிருந்த பிராமணச் சோதிடரின் வம்சத்தில் பிறந்தாயோ? ஆற்காட்டு பயம் பயப்படுகிறாயே? மூடா. ஆறுதலடை."
அந்தப் பரதேசி பின்னும் சொல்லுகிறான்:- "மனுஷ்ய வாழ்க்கை சதமில்லை. பிறப்பை உடனே ஒழி. மண்ணில் பிறக்காதே. வானத்தில் ஏறு. சத்திர கலைகளில் உண்டாகும் அமிர்தத்தைப் பானஞ்செய்யும் யோகி ஒருவன்தான் உன் பாட்டில் கண்டபடி பயப்படாமலிருக்க முடியும். அதைவிட்டு நமக்குத்தான் அகல வெழுதத் தெரியுமென்று நீ கிறுக்கித் தள்ளிவிட்டாய். குண்டலினி அக்கினியைத் தலைக்குக் கொண்டு போ. அப்போது அமிர்த கலசமொழுகும். அந்த அக்கினியும் அமிர்தமும் ஒன்றாய் இன்ப வெள்ளத்திலே நீந்தலாம். இன்ப மிருந்தால் பயமில்லை. இன்பமில்லாத போது பயம் இயற்கையிலே வரும். இருவினைக் கட்டை அறு. நன்மை தீமை யென்ற குப்பையைத் தொலையிலே தள்ளு. எல்லாம் சிவம் என்றறி. உன்னை வெட்ட வரும் வாளும் சிவன்; அதைக் கும்பிடு. உன்னை அது வெட்டாது. சரணாகதி தான் வழி. பொய் பேசாதே. தீங்கு கருதாதே. பேய்க்குந் தீங்கு செய்யாதே. பகைவனுக்குத் தீமை நினைக்காதே. பகைவனையும் சிவனென்றே கும்பிடு. பாம்பின் வாய்க்