பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


இப்பேருண்மையைக் கருவியாகக் கொண்டு ஓர் இலக்கியத்தின் நுண்மைப் பொலிவை நுகர்ந்து உவக்கலாம்; உண்மைச் சுவையை உண்டு களிக்கலாம்.

இதற்கும் ஒரு கவனம் வேண்டும். அக்கவனம் கருவியைத் தேர்ந்தெடுப்பதில் செலுத்தப்படவேண்டும். எண்ணிய செயலுக்கேற்ற நுண்ணியதும் திண்ணியதுமான கருவியாலன்றோ எடுத்த செயல் பெருமையடையும்? தகுதி நிறைந்த கருவியைக் கண்டுகொண்டு தக்கவாறு பயன்படுத்தினால் செயல் எளிதிலும் கைக்கூடும். திருவள்ளுவப் பெருந்தகையும்[1] ‘காலமறிந்து செயலாற்றுபவன் தக்க கருவி யால் செய்யின் செய்வதற்கு அருமையான செயல்களும் உளவோ’ என்றன்றோ அறிவுறுத்தினார்!

அதற்கேற்ப, ஒரு பேரிலக்கியத்தின் அமைப்பையும், அழகையும், செஞ்சுவையையும் காண உரிய கருவியொன்றைத் தேர்ந்தெடுக்கலாம். முன்னர்க் குறித்தாங்கு, அக்கருவி ஒரு கவிஞனாக அமைவதே தெளிவு.

ஒரு கவிஞன் மற்றொரு பெருங் கவிஞனின் தோட்டக் காரணாகலாம். அவனே அவ்விலக்கியத்தின் திறவுகோலாய் நின்று உரியவற்றைத் தெளிவாகத் திறந்து அறிவிப்பான்.

நாமும் அத்திறவுகோல் கவிஞன் துணைக் கொண்டு இலக்கியப் பேழையைத் திறந்து அதனுள் நிறைந்து மிளிரும் மணியணிகளை அணிந்து அழகுறலாம்; கணி அமுதைச் சுவைத்துச் செம்மாக்கலாம்.


  1. அருவினை யென்ப உளவோ, கருவியான்
    கால மறிந்து செயின்.

    - திருக்குறள் : 488.

4