பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இலக்கியப் பார்வை


செவிடர்’ என்று பாரதி அறிவித்த பாங்கை முன்னர் கண்டோம்.

திருவள்ளுவர் மக்கள் வாழ்வை நெறிப்படுத்தும் பேருள்ளங் கொண்டவர். அப்பேருள்ளத்தைத் தன் நூலாம் திருக்குறளில் தெளிவாகப் பதித்துள்ளார். மக்களின் செம்மை வாழ்வுக்குச் சில கருத்துகளை உறுதிப்படுத்திக் கூறக் கருதினார்; அதே நேரத்தில் தெளிவாகவும் விளக்கக் கருதினார். சில கருத்துகளை ஆழமாகக் குறிக்கக் கருதினார். அதே நேரத்தில் விரிவாகவும் விளக்கக் கருதினார். அழகாகவும் வைக்கக் கருதினார். இவ்வாறே திருவள்ளுவர் தம் எண்ணத்தை நூலில் பதித்திருப்பதை உணர்ந்த பாரதியார்,

திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும்”

கருதினேன் என்று விரித்துப் பாடுகின்றார். இக்கருத்துகளால் திருவள்ளுவர் மக்களை எந்நிலைக்குக் கொண்டு செல்கிறார் என்பதையும் பாரதி எண்ணிப் பார்க்கிறார். திருக்குறளுக்குள் புகுந்து நின்று நோக்குகிறார். வள்ளுவர் மக்கள் வாழ்வாங்கு வாழ வகை சொல்லுவதைக் காண்கிறார். அவ்வாறு ‘வாழ்வாங்கு வாழ்பவன் மனித நிலையைக் கடந்து வானுறையும் தெய்வமாக ஆவான்’ என்ற அறிவிப்பு பாரதியை அகல விழித்து நோக்க வைக்கிறது.

‘என்னே வள்ளுவர் தம் திறன்! மனிதனைத் தெய்வமாக்கி காட்டுகின்றாரே. மனிதனைத் தெய்வமாக்குபவரை மனிதராகவோ கொள்வது? தெய்வமென்றன்றோ கொள்ள

19