பக்கம்:பாற்கடல்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10

தற்கு முந்திய பக்கங்களில் மன்னிப் பாட்டியின் துயரக் கேணியில் இறங்கிய ஆதங்கம் எனக்கு இன்னமும் தணிந்தபாடில்லை. இந்த அனுபவம் என்னை பாதித்திருக்கும் அளவுக்கு வாசகனை பாதித்திருக்க முடியாது; பாதிக்கக் கூடாதென்று கூடச் சொல்லலாம் - என்றாலும் இதன் விளைவாய் மேலும் சொல்ல விழைகிறேன்.

கானல் நீர் எழுத்தைப் பருகிப் பருகித் தாபம் தீராத கவனங்கள், மன்னிப் பாட்டியைப் பற்றிய பக்கங்களை மாற்று மருந்தாகவேனும், பிடிக்காவிட்டாலும் விழுங்க வேண்டும் என்கிறேன். அதென்ன கானல் நீர் எழுத்து? இதோ :

ஃபிரிஜ்ஜில் மின்சார ஓட்டம் தாழ்ந்த ஸ்ருதி போல் அடங்கி இழைந்து கொண்டிருந்தது. பிரம்மாண்டமான டபிள் bedஇல் சுற்றிச் சிதறிக் கிடந்த வெல்வெட் தலையணைகளின் நடுவே அவள் படுத்திருந்த கோலம், ஸெலுலாயிடு பொம்மையை நினைவூட்டியது. விழித்தெழுந்து உடலை முறித்துக்கொண்டு உட்கார்ந்ததும் அவள் தன் பாதங்களை நுழைக்க, கணக்காகக் காலடியில் மொஸெய்க் தரைமேல் விரித்த ஜமக்காளத்தின் மீது ஸேட்டின் ஸ்லிப்பர்ஸ் காத்துக் கொண்டிருந்தன. கண் திறந்ததும் முதல் முழிக்கு நேர் எதிரே சுவரில் மாட்டிய படத்திலிருந்து ஆள் sizeக்குக் கமலஹாஸன் இடுப்பு வரை வெறும் உடம்பில் boxing poseஇல் பதுங்கியபடி சிரித்துக் கொண்டிருந்தான். அந்த இடது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/154&oldid=1534064" இலிருந்து மீள்விக்கப்பட்டது