பக்கம்:பாற்கடல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

லா. ச. ராமாமிருதம்


கல்யாணங்கள் சொர்க்கத்தில் முடிக்கப்படுகின்றன. இரண்டு திருமணங்களும், அவற்றுக்குச் சமயம் வாய்த்தபோது, ஒரே பந்தலில்தான் நடந்தன.

மாமாவையும் அத்தையையும் புதுக்குடித்தனம் வைக்கப் பெரியவர்கள் யாரும் கோயமுத்தூர் போனதாகத் தெரியவில்லை. ரயில் சார்ஜுக்கு எங்கே போவது? அம்முவாத்து காலக்கடுப்பு எவ்வளவு மோசம் என்று எவ்வளவு ருசுப்படுத்த முயன்றாலும் போதாது. 'பெருந்திருவே கருப்பண்ணாய என்று அம்மன் பலகைக்கு விழுந்து நமஸ்கரித்து, பெரியவர்களை நமஸ்கரித்து எழுகையில் அவர்கள் இட்ட விபூதியோடு தோய்ந்த ஆசிதான் கடைசிவரை துணை. ஆனால் அதற்குத்தான் என்ன குறைச்சல்!

ஆனால் வழியனுப்புகையில், பெண்ணுக்குத் தாயாரின் புத்திமதியைப் பற்றி மாத்திரம் அண்ணாவின் கேலி இன்னும் நினைவில் நிற்கிறது.

”சோனா!-(அத்தை 'ஞே'வென்று தேய்ந்து மாய்ந்து சோனியாக இருப்பாள். ஆகையால் அவளை அழைக்கும் பெயர் சோனியிலிருந்து வயதாக ஆகச் சோனாவாக மருவி இட்ட பெயரினும் கெட்டியாக நிலைத்து விட்டது) "சோனா, மறக்காமல் வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேச்சுக்கோ! நெய் வாங்கி வெச்சுக்கோ.”

'இங்கே அம்மாப் பெண்ணுக்கு இவள் சிபாரிசு செய்யும் வாரக் குளியல்களும் சௌக்யங்களும் கிட்டுமா? நெய் வாங்கி வெச்சுக்கோவாம். அம்மாப் பெண்ணை விடு. ஏன், உன் ஆம்படையான் உடம்பை கவனித்துக் கொள்' என்றுகூட ஒரு வார்த்தை சொல்றது தானே! அதைச் சொல்லக்கூடத் தோன்றவில்லையே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/170&oldid=1534273" இலிருந்து மீள்விக்கப்பட்டது