பக்கம்:பாற்கடல்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

லா. ச. ராமாமிருதம்


சிதம்பரமையர் சம்சாரம் சோனியா? கெட்டிக்காரியா? அல்லது இரண்டுமா? தெரியாது.

ஆனால் idea உடனேயே பற்றிக்கொண்டு கிறுகிறுவெனப் பரவியும் விட்டது.

“சோற்றுத் தவலையை என்னால் இறக்கி வைக்க முடியாது. அதுமட்டும் புருஷாள் கவனிச்சுக்கட்டும். சாதம் பதம்வரை நான் பார்த்துக்கிறேன். சுற்றுக் காரியம் வந்திருக்கறவா செஞ்சு கொடுத்தால் நான் ஏத்தி இறக்கிடறேன்.“

அவ்வளவுதான் சமையல்கட்டு ஒரே குதூகலக் கூடமாக மாறிவிட்டது. பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கும் மாமிகள் போட்டி போட்டுக் கொண்டு தேங்காய் துருவுகிறார்கள். காய்கறி நறுக்குகிறார்கள். வடைக்கு அரைத்தாகிறது. அதற்கு உப்பு, மிளகாய்த்திட்டம் அம்மாப் பெண்ணுடையதுதான். கூடத்தில் அதுபாட்டுக்கு இட்டிலிக் கடை நடக்கிறது. சாதம் பதமாகி, சோற்றுத் தவலைக்குக் கோணி கட்டி இரண்டு ஆண் பிள்ளைகள் பிடித்து நகர்த்திக் கஞ்சி வடியத் தொட்டி முற்றத்துக்கு உருட்டி விட்டாச்சு. ஹெஸர் இன்னொரு தவலையில் காய்கிறது. பாவாடை தாவணியில் ஒரு சிறுமி, அவள் மாரளவுக்கு வீடு அண்டாக்களில் கோட்டையடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு, ரசத்தைக் கிளறிக்கொண்டிருக்கிறாள். இதற்குள் இட்டிலிப் பானையின் மேல்மூடியை ஒரு ஆண்பிள்ளை தூக்க, இட்டிலியைப் பதம் பார்க்கிறாள். ஆச்சு, ஆச்சு, இன்னும் பாயசமும், வடையும்தான் பாக்கி. சொன்னபடி பதினோரு மணிக்கு இல்லாட்டாலும் பன்னிரண்டு மணிக்கு இலை போட்டுவிடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/186&oldid=1534289" இலிருந்து மீள்விக்கப்பட்டது