பாற்கடல்
213
பத்தே நாட்களில் சுந்தரம், சுப்ரமணியனை இழந்த பின்னர், வாழ்க்கையைப் போஷிக்கும் சில சந்தோஷ ஊற்றுகள் என் பெற்றோர்களின் நரம்புகளில் வற்றிவிட்டன என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.
ஆங்கிலத்தில் ஒரு கவிதை The wreck of the Hesperus (பையன் பருவத்தில் படித்தது. தலைப்பு தப்பாயிருப்பின் திருத்தம் கோருகிறேன்)
கப்பல் தேசத்தில், இங்கிலாந்தின் அரசன் முதலாம் எட்வர்டின் மகன் மூழ்கிவிடுகிறான். தகப்பனைப் பற்றிக் கவிதையின் கடைசி வரி இப்படி முடிகிறது;
He never smiled again.
அண்ணாவும் அம்மாவும் சிரிக்காமல் இல்லை. அண்ணா தமாஷ் பண்ணாமல் இல்லை. குடும்பத்தின் சந்தோஷங்களில் இருவரும் பங்கு கொள்ளாமலில்லை. கல்யாணம் கார்த்தி என்று வெளி விசேஷங்களுக்குப் போகாமல் இல்லை. சபை நடுவே கலகலப்பாக இல்லாமல் இல்லை. துக்கத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கவில்லை. வாழாமல் இல்லை. ஆனால்?
ஆனால் –
இருவர் ரத்த ஓட்டத்திலும் துயரக் குமிழி ஒன்று உருவாகி, ரத்தக் குழாயை அடைக்காமல், ஆனால் உடையாமல், கரையாமல் எஞ்சிய வாழ்நாள் பூராவும் தங்கிவிட்டது. ஓ, எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
இந்தச் சோகத்தோடு பங்கு தீர்ந்துவிட வில்லை. அண்ணாவைச் சாவு முன்னால் ஆட்கொண்டதோ மற்ற இடிகளினின்று பிழைத்தார். இல்லாவிடின் அவர்