பக்கம்:பாற்கடல்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

லா. ச. ராமாமிருதம்


ஸுபாவின் பெரும் வெற்றிகளில் ஒன்று, 'கங்கா' எனும் கதைக்கு அவருடைய முகப்புச் சித்திரம். வெள்ளி மணிகள் கிண்கிணிக்க கோயில் சிற்பக் கதவுகள் மெதுவாகத் தாமாகத் திறக்கின்றன. உள் இருளில் இரண்டு ஜாலர்கள் ஒன்றோடொன்று அறைகின்றன. அந்த நாள் S.S.L.C. முடித்த ஒரு பையனின் இதயத்தில் முதல் முதலாகக் காதலின் பிறப்பை இந்த உருவகத்தில் தான் எழுதியிருந்தேன். ஸுபாவின் சித்திரம் தனித் தன்மையில், கதைக்கு வலுவூட்டமாக அமைந்ததோடல்லாமல், அதன் ஸ்தலத்தில், இலக்கியத் தடத்தையும் பெற்றுவிட்டது என்பது என் கருத்து மட்டும் அல்ல பலருக்கு ஏற்பட்ட பாதிப்பு.

அடுத்து எனக்கு முழுத் திருப்தியை அளித்தது அவர் என் ஜனனி முதல் கதைத் தொகுதியின் முதல் பதிப்பின்மேல் மூடிக்கு Wrapper வரைந்த கலர்ச் சித்திரம். அதற்கு idea கூட நான் கொடுக்க்வில்லை. ஆனால் அற்புதமாக அமைந்தது. வளைவரிசையில் அகல் ஜோதிகளின் சுடரையும் செந்தழலையும் கலர் block வெற்றியோடு எடுத்தது. தொகுதியின் தலைப்புக் கதையின் தகுதிக்கேற்பப் படம், லேசான அரூபத்துடன் (abstractness) ஜ்வலித்தது. வியாபர ரீதியில் அந்தப் பதிப்பு படுதோல்வி. ஆனால் இப்போது அது ஒரு collector's item ஆகிவிட்டது.

பிறகு எனக்கு உத்தியோகத் தொந்தரவு, வெளியூர் மாற்றல். அதனால் சுமக்க வந்த பொறுப்புகள் எல்லாம் சேர்ந்து அமுதசுரபியையும் என்னையும் சில வருடங்கள் பிரித்து வைத்தமையால், என் கதைகளுக்கும் ஸுபாவின் படங்களுக்கும் தொடர்பு அற்றுப் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/226&oldid=1534328" இலிருந்து மீள்விக்கப்பட்டது