256
லா. ச. ராமாமிருதம்
இருந்தாற் போலிருந்து எங்கள் வீட்டுச் சமையலறையைக் காண்கிறேன்.
அடுப்பெதிரில் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். குழந்தையாய் அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன். என் முகத்தை மூடிய மேலாக்கைத் தள்ளிவிட்டுத் திரும்பி, அடுப்பிலாடும் தீயை வியப்புடன் நோக்குகிறேன். என் உதட்டோரத்தில் பால் வழிகிறது.
அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது, நீலமும், சிவப்பும், அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும் நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழந்து, விதவிதமான உருவங்களையும் முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.
பார்த்த முகங்கள், பாராத முகங்கள்.
இவ்வேழு மாதங்களுக்குள் நான் எவ்வளவு முகங்கள் பார்த்திருக்க முடியும்? ஆனால் இவ்வேழு மாதங்களுக்குள் நேர்ந்த முகங்கள் அல்ல இவை. ஏழாயிர வருடங்களின் முகங்கள்.
நான் அளித்த பதில்:
“ஏழு மாதத்தில் என் தாய்ப்பால் அனுபவத்தை நினைவு பூர்வமாக எழுதினேன் என்று நான் - கதாநாயகனின் வாய் மூலமாகச் சாதிக்க முடியுமா? அது சாத்தியமா இல்லையா என்கிற அளவுக்கேனும் எனக்கு புத்தியில்லையா ? ஆனால் பிற தாய்மார்களிடம், பிற குழந்தைகள் பால் அருந்துவதையும், அவ்வளவு தூரம் போவானேன்? எனக்குப் பின் என் உடன் பிறப்புகள் அம்மாவிடம் பால் குடித்துக்கொண்டு