266
லா. ச. ராமாமிருதம்
அதிலும் ஹோட்டலிலிருந்து வீட்டுக்கு வரும் இட்டிலி காப்பி, ஸ்பெஷல், முதலாளி குடும்பத்துக் கல்லவா? கேட்கணுமா?
மாமி ரொம்ப நல்லவள். இட்டிலியை ஒரு பாத்திரத்தில் போட்டு வெஞ்சனங்களுடன் பின் கட்டுக்குப் பெண்ணிடம் சில சமயங்கள் அனுப்புவாள். நாங்கள் காக்கைகளுக்கு மேல் அடித்துக் கொள்வோம். ‘மானம் போறது!’ என்று அம்மா எங்கள் முதுகில் (முதுகுகளிலா?) அறைவாள்.
நாங்கள் வசம் கண்ட பூனைகளாகி விட்டோம். ஹோட்டலிலிருந்து வரும் டிபனை மோப்பத்திலேயே அறியும் சக்தி எங்களுக்கு வந்துவிட்டது. இடையில் சித்தப்பா காவலையும் 'டேக்கா' கொடுத்துவிட்டு முன்கட்டில் ஆஜராகிவிடுவோம். அவர்கள் பங்கு போட்டுச் சாப்பிடுவதைக் காக்கை மாதிரி பார்த்துக் கொண்டிருப்போம்.
மாமியும் கொடுப்பாள்.
மாமியும் குழந்தைகளும் தின்ன முடியாமல் தின்று திணறிப்போன மிச்சத்தைத் துண்டம் துண்டமாகக் காக்கைக்கு எறிகையில், எங்களுக்கு வயிறு எரியும். முன் கட்டுக்கு வரும் காக்கைகள் வாடிக்கைக் காக்கைகளோ? தனிப் பருமனாக எங்களுக்குத் தோன்றும்.
பின் கட்டுக்குத் திரும்பினதும், சித்தப்பா எங்களைத் திட்டிக்கொண்டு எள்ளுருண்டையாகக் (குள்ளபட்டா) குதிப்பார். அதெல்லாம் நிமிஷமாகத் துடைத்தெறிந்து விடுவோம். மானம் பார்த்தால் இட்டிலி கிடைக்குமா? ஆனால் சித்தப்பா குதிப்பதையும், சத்தம் போடுவதையும் பார்த்தால் பயமாய் இருக்கும்.