298
லா. ச. ராமாமிருதம்
தெருவில் நேர்ந்த இந்தக் கவிதை பொய் இல்லை என்பதற்கு என் மகள் சாக்ஷி.
தான் தேவைப்படவில்லை என்று தனக்கு நிச்சயமான பிறகு அந்தப் பெண்மணி தன் காரியமாகப் போய்விட்டாள். ஆனால் அவள் வார்த்தைகள், என் உடல், மன நிலையில் எனக்கு எவ்வளவு தைரியம் தந்தன என்று எந்த அளவில் என் வார்த்தைகள் பதியவைக்க முடியும்?
ஆனால் அந்தத் தாயாருடன் சந்திப்பு அத்துடன் சரி. ஆயிரம் குற்றங்கள் குறைகள் ஒருவரையொருவர் கண்டுகொண்டும் சொல்லிக்கொண்டும் திரிந்தாலும், உயிருக்குயிர் உறவின் உள்சரடு சத்தியம். ஒருநொடிப் பொழுதுக்குத்தான் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டாலும், ”நான் இருக்கிறேன்!” என்கிறது. அப்பா, என்ன பலம்! என்ன சுமை தாங்கல்! இதைத்தான் நான் சொல்ல முயல்வது.
எல்லாம் ஊமை கனாக் காணும் வேதனை! இதற்கு ஓர் ஊமை பதிலும் வேதனை எழுந்த இடத்திலேயே கிடைக்காமலும் இல்லை.
”நீ உனக்கு இருக்கும் இரு கைகளாலேயே உலகத்தை அணைக்க ஆசைப்படுகிறாய். ஜீவசக்தியின் அடிப்படை ஒருமைதான் உன்னுள் நீ உணரும் எழுச்சி. உன் ஆசை பேராசை, சாணளவுகூட இல்லாத உன் வாழ்க்கையில் உன் பங்குக்கு வழங்கி இருக்கும் உறவுகளைப் பேணிக் காத்து இன்புற உன் தகுதியை வளர்த்துக்கொள்ள வழி பார்.
சித்திக்குச் சீமந்தம். நடுமுற்றத்தை அடைத்துப் பந்தல். இந்த நாளில் தாலி கட்டும் கலியாணத்திலேயே