2 - கலித்தொகை மூலமும் உரையும் கடவுள் வாழ்த்து சிவனே கேளாய்! அகில் உலகங்கட்கும் ஆதி முதலாகியும், தான் அநாதி யாகவே விளங்குபவன் சிவபிரான்; அவன் அந்தமும் இல்லாதவன். அவன் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத் தொழிலுக்கும் முதல்வன். ஊழிக்காலத்திலே அனைத்தையும் அழித்துத் தன்னுள் ஒடுக்கி, மீளவும் தோற்றுவிப்பவனும் அவனே. அவன், ஊழிப்பெருங்கூத்தினை ஆடி உலகை அழித்துக் கொண்டிருக்கிற வேளையில், அருள் சக்தியான தேவியின் கடைக்கண் பார்வைக்கு இலக்காவான். அதனால், அவனுடைய உக்கிரம் படிப்படியாகக் குறையும். மீண்டும் அருளோடு, ஆதிசக்தியின் துணையோடு, உலகினைப் படைக்க முனைவான். இந்தத் தத்துவம் சிவசக்திகளின் உண்மைநிலையை நன்கு விளங்குவதாகும். இதனை, அவன் ஆடுவதாகவும், அந்த ஆட்டத்திற்கு இயையப் பயின்றுவரும் தாளத்தினை அவனுடனிருக்கும் அம்மையானவள் தந்து உதவுவாளோ எனவும் கேட்டு, ஓர் அருமையான நடனக்காட்சியாகக் கற்பித்துக் காட்டுகின்றார் புலவர். உயிர்கள்பால் அருள்கூர்ந்து உதவும் இறைவன், அத்தகைய பேராற்றலும் வெம்மையும் உடையவன். அவனது ஊழிக்கூத்து அகில உலகங்களையும் அடியோடு சங்காசாரஞ் செய்யும் இயல்புடையது. எனினும், அவ்வேளையில் அம்மையும் உடனிருத்தலால், பேரழிவுக்குத்தப்பி எல்லாம் மீண்டும் அமைதி பெறுகின்றன. இதுவே, இப் பாடல் காட்டும் சிவசக்தி தாண்டவ ஒவியம் ஆகும். ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்து, கூறாமல் குறித்ததன் மேல் செல்லும் கடுங் கூளி மாறாப் போர், மணி மிடற்று, எண் கையாய்! கேள், இனி, படு பறை பல இயம்ப, பல் உருவம் பெயர்த்து நீ, 5 கொடுகொட்டி ஆடுங்கால், கோடு உயர் அகல் அல்குல், கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ? மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,