பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

திருக்குறள்

தமிழ் மரபுரை



(2) அதே நூற்றாண்டினதான மணிமேகலையில்,

"தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்”
(22:59-62)

என்று, சீத்தலைச் சாத்தனார் சதுக்கப் பூதத்தின் கூற்றாக 55ஆம் திருக்குறளை யெடுத்துக்கூறி அதன் ஆசிரியரையுங் குறித்தமை.

(3) மணிமேகலைக்கு முந்திய புறநானூற்றில், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார் பாடிய பாட்டில்,

"ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கு
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்"
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவெனவ்
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே ஆயிழை கணவ"
(புறம்.34)

என்று.

"எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்நன்றிகொன்ற மகற்கு" (110)

என்னும் குறளும், காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய பாட்டில்,

"ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே" (புறம்.278)

என்று 99ஆம் குறளிலுள்ள "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்" என்னும் தொடரும், குறிக்கப்பட்டுள்ளமை. சான்றோன் என்னும் பெயர் அமைந்த ஒழுக்கமுள்ள மறவனையும் குறித்தலால்,

"செங்களந் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடைக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே”
(புறம்.14:12)

என்னும் புறப்பாட்டுப் பகுதி, “தன்மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய்" என்னுங் குறட்பகுதியொடும் முற்றும் பொருந்துவதே.