அறியவேண்டிய திறங்களாவன: குடிப்பிறப்பு, இயல்பு, கல்வி, அறிவு, ஒழுக்கம், செல்வம், அகவை(வயது), மனப்பான்மை முதலியவற்றால் ஏற்படுந் தகுதிவேறுபாடுகள். அவற்றையறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும் கேட்போர்க்குமுள்ள ஏற்றத் தாழ்வுகளையும் வேற்றுமைகளையும் அறிந்து அவற்றிற்குரிய மரபுப்படி சொல்லுதல். அது உலகத்தோ டொட்ட வொழுகலையும் கேட்போர்க் கினிமையும் பயத்தலால் அறவினை யாயிற்று; கேட்போர்க்கு விளங்கிய வினை முடிவதாற் பொருள்வினை யாயிற்று. அறனும் பொருளுமாகிய விளைவுகள் அவற்றை விளைக்கும் வினையின்மேல் நின்றன. 'அதனினூஉங்கு' இன்னிசை யளபெடை.
645. சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.
(இ-ரை.) சொல்லைப் பிறிது ஓர் சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து - தாம் சொல்லக் கருதிய சொல்லை வெல்லக்கூடிய வேறொரு சொல்லில் லாமை யறிந்து; அச் சொல்லைச் சொல்லுக - பின்பு அச் சொல்லைச் சொல்லுக.
'பிறிதோர் சொல்' பகைவரின் மறுப்புச் சொல். சொல் என்பது தனிச் சொல்லிற்கும் கூற்றிற்கும் பொதுவாம். வெல்லுதல் உண்மையுணர்த்துவதிலும் ஏதுக்கள் கூடிய ஏரணவலிமையிலும் மிகுந்து, எதிரிகள் கூற்றைப் பொருளற்றதெனக் காட்டுதல். இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வரு நிலையணி. இனி, பிறிதோர் சொல்லும் வெல்லுஞ்சொல்லும் என இரண்டாகக் கொண்டு. "ஒத்த சொல்லும் மிக்க சொல்லு முளவாகாமற் சொல்லுக' என்றுரைப்பது பொருந்தாதாம்.
646. வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொற் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்.
(இ-ரை.) வேட்பத் தாம் சொல்லி - தாம் பிறர்க்கு ஒன்றைச் சொல்லும் போது அவர் பின்னுங் கேட்க விரும்புமாறு இனிதாகவும் தெளிவாகவும் சொல்லி; பிறர் சொல் பயன் கோடல் - பிறர் சொல்லைத் தாம் கேட்கும் போதுமட்டும், அதிற் சொல்லினிமையும் பொருள் விளக்கமும் இலக்கண வொழுங்கும் இல்லாதிருப்பினும், அதன் பொருளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் குற்றமற்ற சிறப்புடைய அமைச்சரின் இயல்பாம்.