பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாவேந்தரோடு நான்: சில நினைவுகள் கவிஞர் வாணிதாசன் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற புரட்சிப் பயிர் விளைந்த புதுவைப் பண்ணை பாவேந்தர் பிறப்பிடம்; அப்பண்ணையின் இரண்டாம் போகப் பயிர் கவிஞர் வாணிதாசன். பாவேந்தர் பயின்று பட்டம் பெற்று ஆசிரியர் பணி புரிந்த கல்வே கல்லூரியில் இவரும் பயின்று பட்டம் பெற்று ஆசிரியராகப் பணிபுரிந்தார். எனவே கல்வே கல்லூரியின் இலக்கிய வரலாற்றில் பாவேந்தர் முதல் அத்தியாயம்; வாணிதாசன் இரண்டாம் அத்தியாயம். பாவேந்தர் புதுவையில் பிறந்து ஈரோட்டுக்குச் சென்றவர். வாணிதாசன் புதுவையில் பிறந்து ஈரோடு வழியாகக் காஞ்சி சென்றவர். ஷாநாமா' எழுதிய பாரசீகப் பெருங்கவிஞன் ஃபிர்தெளசியைப் போல, இறந்த பின் அரசாங்கப் பரிசை எதிர்கொண்டவர். இவர் நூற்றுக்கு நூறு பாவேந்தரின் மாணவர். பாவேந்தரின் கவிதைப் பாணியை அப்படியே பின்பற்றி எழுதியவர். எப்போதும் கவிதை மயக்கத்தோடு வாழ்ந்தவர்; நன்றியுள்ளவன்' என்று பாவேந்தரால் பாராட்டப்பட்டவர். இங்கே பாவேந்தர் என்னும் பசும்பொன்னைத் தம் எழுத்துத் தராசில் எடை போட்டுக் காட்டுகிறார். பாவேந்தர் பாரதிதாசனை அறியாதார் இலர். அவரைப் போன்று தமிழுக்குத் தொண்டு செய்தவர் பிறந்ததும் இல்லை; இனிப் பிறக்கப் போவதும் இல்லை!