பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 279 பனைமரத்துப் பட்டி ஏரியிலிருந்தும் வரால்மீன் வாங்கிவந்து கொடுப்பேன். வரால் என்றால் அவருக்கு உயிர்; அதன் சுவை பற்றி விரிவாகப் பேசுவார். மீன் குழம்பை மூன்றுநாள் சுண்டவைத்துச் சாப்பிடுவார். சேலம் நண்பர் ஒருவர் கரடி வற்றலும், புதுக்கோட்டை நண்பர் ஒருவர் புவி வற்றலும் கொண்டுவந்து கொடுப்பார்கள். அவற்றைச் சமையல்காரனிடம் எண்ணிக் கொடுத்து வறுக்கச் சொல்லுவார். கருவாடு அவருக்குப் பிடிக்கும். பரிமாறப்பட்ட வாழை இலையின் பக்கவாட்டில் அமர்ந்து கொண்டு எங்களிடம் பேசியவண்ணம் சாப்பிடுவார். இப்படி சாப்பிட்டு வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. சென்னை போக்ஸ் ரோட்டில் இருந்த டைரக்டர் கோட்னிஸ் வீட்டின் ஒரு பகுதியில் பாவேந்தரின் அலுவலகம் இருந்தது. ஒருநாள் பாவேந்தரும் நானும் இரண்டாவது படம் பார்க்கச் சென்றோம். முதல் ஆட்டம் இன்னும் அந்தக் கொட்டகையில் விடவில்லை. பாவேந்தர் வெளியில் ஒட்டியிருந்த சினிமா போஸ்டர்களையெல்லாம் மெதுவாகப் பார்த்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். அங்கே நின்று கொண்டிருந்த வாயில் காப்பாளன் "யாரது? வெளியே போய்யா!' என்று அவரை விரட்டினான். 'யாரைப் பார்த்து வெளியே போகச் சொல்ற என்று சொல்லி அவனை அடித்து விட்டார். உடனே உள்ளே இருந்த கொட்டகை முதலாளி, மேனேஜர் எல்லாம் ஓடி வந்து இவரைச் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றனர். ஒருநாள் ஒரு 35 வயதுப் பெண்ணொருத்தி இவர் அலுவலகத்துக்கு வந்தாள். அவள் ஆந்திரக்காரி. ஏதோ கோவில் கட்டுவதற்கு நன்கொடை கேட்டாள். இருக்கற கோயிலுக்குப் போறதுக்கே ஆளைக் காணம். நீ வேற கோயில் கட்டறயா? அது கிடக்கட்டும். உனக்குச் சமைக்கத் தெரியுமா? என்று பாவேந்தர் கேட்டார். "தெரியும்" என்றாள் அவள். "சரி ஒருவேளை சமை பார்ப்போம்! ஆந்திரக்காரி. கொஞ்சம் காரம் அதிகமா இருக்கும் பரவாயில்லை!" என்று சொன்னார். பிறகு அவளைச் சமையல்காரி ஆக்கிவிட்டார். பாவேந்தர் முன்கோபக்காரர் என்பது நாடறிந்த செய்தி. என்றாலும் நண்பர்களிடம் பழகும்போது மிகவும் எளிமையானவர். அன்போடு உபசரிப்பார். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். தமக்குத் தெரியாத செய்தியை வேறு யாராவது சொன்னால் வியப்போடு கேட்பார். அதை மற்றவர்களிடம் கூறிப் பாராட்டுவார். சில புலவர்களிடம்