பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் இயல்பூக்கங்கள் (instincts) பறவைகளுக்கும் உண்டு. இவ்வுணர்ச்சிகள் பொங்கி வழியும் போது நாடகக் காட்சிகளாக அமைகின்றன. அக்காட்சிகளில் நடிக்கும் பறவைகளின் மெய்ப்பாடுகளையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன். புறாக்கள் காதலிப்பது போல் மனிதர்கள் கூடக் காதலிக்க முடியுமா என்று ஐயம் ஏற்படும்படி ஒரு காதல் நாடகம் : தலைதாழ்த்திக் குடுகு டென்று தனைச்சுற்றும் ஆண் புறாவைக் கொலைபாய்ச்சும் கண்ணால், பெண்ணோ குறுக்கிற் சென்றே திரும்பித் தலைநாட்டித் தரையைக் காட்டி, இங்குவா என அழைக்கும்; மலைகாட்டி அழைத்தா லுந்தான் மறுப்பாரோ மையல் உற்றார். தாயர் குழந்தைகளுக்கு உணவூட்டுவதை நாம் நாள்தோறும் காண்கிறோம். அப்போது தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நடைபெறும் அன்பு நாடகம் உள்ளத்தை நெகிழ்விக்கும் தன்மையது. அது போன்ற ஒரு நாடகக் காட்சியைக் கவிஞர் சிறப்பாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். தாய் இரை தின்ற பின்பு தன்குஞ்சைக் கூட்டிற்கண்டு வாயினைத் திறக்கும்! குஞ்சு தாய் வாய்க்குள் வைக்கும் மூக்கைத்; தாய் அருந்தியதைக் கக்கித் தன்குஞ்சின் குடல்நிரப்பும்; ஒய்ந்ததும் தந்தை ஊட்டும்! அன்புக்கோர் எடுத்துக் காட்டாம். குழந்தைக்குத் தாய் மட்டுமே நம் வீடுகளில் கொஞ்சிக் கொஞ்சி உணவூட்டுவதைப் பார்த்திருக்கிறோம்.