பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1
சுயம் வர காண்டம்

நிடதநாடு நளன் ஆண்ட நாடு; அதன் நீர்வளம் நிலவளம் அதனைச் செல்வம் மிக்க நாடாக ஆக்கின.

கண்ணைக் கவரும் பொய்கைகள் அவற்றில் வண்ண மலர்கள் அந்த நீர் நிலைக்கு அழகு ஊட்டின; வயல்களில் கயல்மீன்கள் பிறழ்ந்து கவின்மிக்க காட்சியைத் தந்தன; குவளை மலர்கள் பூத்துக் கிடந்தன; தாமரை மலர்களில் செந்தேன் சொட்டத் தளைகள் அவிழ்ந்தன. காட்சிக்கு இனியதாக அவ்வூர்ப் பொய்கைகள் எங்கும் நிறைந்து கிடந்தன.

கயல் பிறழ்ச்சியும், குவளை மலர்ச்சியும், தாமரை தளை நெகிழ்ச்சியும் திருமகளின் கண்களை நினைவூட்டின. நிலமடந்தையின் கண்போல் நிடத நாடு தோற்றம் அளித்தது; பல்வகைச் சிறப்புகளால் அது ஏற்றம் பெற்று இருந்தது.

இந்த நாட்டின் தலைநகர் மாவிந்தம் ஆகும். இந்நகர் செல்வம் மிக்க நகராக விளங்கியது. மகளிர் தம் கொங்கைக்கு அப்பிய கலவைச் சாந்து அது உலர்ந்து குப்பையாய்த் தெருவை நிரப்பியது. களிறுகள் அக்கலவைச் சாந்தில் கால் வழுக்கிவிழுந்தன. அது சேறாக விளங்கியது.