பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

புகழேந்தி நளன் கதை



கண்களில் நீர் துளித்தன. தந்தையின் காலடிகளில் விழுந்து வணங்கினான். தங்கையும் புத்தாடை உடுத்தி இருந்தாள்; பொன் நகைகள் மின்னி அவளுக்கு அழகு தந்தன. அவளும் தந்தையின் திருவடிகளில் விழுந்து வணங்கினாள். புதல்வர்களை எடுத்து அணைத்துக் கொண்டு அளவற்ற மகிழ்வு கொண்டான்.

தமயந்தி மாலையிட்ட நாளில் அவள் கையில் பொன்மாலை தாங்கி இருந்தாள். அந்தக் கோலத்தில் அவள் அவனிடம் வருவாள் என்று எதிர்பார்த்தான். மன்னர் விழித் தாமரை பூத்த மண்டபத்தே பொய்கையிடத்து அன்னம் நடப்பதுபோல் நடந்து வந்தாள். வெள்ளைச் சிறகு அன்னம்போல் வந்தவள்; செம்பஞ்சுக் குழம்பு பூசிய சிவந்ததாள் அவை மின்னல்போல் பளிச்சிட்டன. அந்தக் காட்சி அவன்முன் நின்றது.

அவன் எதிர்பார்க்கவில்லை. அவளை அவன் பாழ் மண்டபத்தில்விட்ட காட்சியோடு வந்து நிற்பாள் என்று. அவன் விட்டுச் சென்ற கோலத்தில் அவன் முன் வந்து நிற்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

பாதித் துகிலோடும் பாய்ந்து இழியும் கண்ணீரோடும் அவன் முன் வந்து நின்றாள். அவள் குங்குமம் அப்பிய தனம் இப்பொழுது மாசு படிந்த நிலையில் அவளைக் காண நேர்ந்தது. அந்த அலங்காரங்கள் அவளை விட்டு அகன்றன என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

மாசு படிந்த சித்திரம்; அது புதுமையாக நின்றது. அவன் காலடிகளில் விழுந்தது. அவனைக் கண்ட அவள் கண்கள் அவனைக் கண்ணீரால் குளிப்பாட்டின. அவன் விட்ட துளிகள் அவள் திருமுடிமேல் பட்டு அவளை நனைத்தன; அவை அவன் இரக்க உணர்வைத் தீட்டிக் காட்டின; பரிவும் பாசமும் நீ முந்தி நான் முந்தி என்று அணியிட்டுக் கொண்டு வந்தன என்பதை அறிந்தான்.