பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

133



2. மற்றொன்று கிளத்தல்

நாட்டு மக்கள் நேர்மை தவறாதவர்கள். அழுகை கலக்கம் இவற்றைக் காணாதவர்கள்; சொற் சோர்வு இல்லாதவர்கள், நெறி பிறழாதவர்கள் என்பது கவிஞர் சொல்ல வந்த கருத்து.

அதை நேரே கூறாமல் உடன்பாட்டு வாய்பாட்டில் வேறு வகையில் கூறுவது அவர் சொல்லாட்சித் திறனைக் காட்டுகிறது.

வெஞ்சிலையே கோடுவன; மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன; மாளிகைமேல் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு

“வில்வளைவது; கூந்தல் சோர்வது; சிலம்பு அரற்றுவது; நீர்த்தடாகங்கள் கலங்குவன; மகளிர் கண்கள் பிறழ்வன” என்று கூறுவது சிறப்பாக உள்ளது.

3. முரண்தொடை நயம்

‘தெரிவன’ ‘தெரியாதன’ என்று முரண்தொடை நயம் அமையச் சொற்களை ஆள்வது நயம் தருகிறது. அதே போல ‘இரவு’ ‘கரவு’ இயைபுத் தொடை அமைத்துச் கவிதைக்குத் தொடை நயம் தோற்றுவிக்கக் காண்கிறோம்.

‘இல்லாதன கல்லாதன’ என்பவற்றில் சொல்லாட்சி நயம் தோற்றுவிக்கின்றார். வறுமை இல்லை; அதனால் இரத்தலும் இல்லை; களவு செய்தலும் இல்லை என்று கூறுவது நயம் மிக்கதாக உள்ளது.

தெரிவனநூல் என்றும் தெரியா தனவும் .
வரிவளையார் தங்கண் மருங்கே - ஒரு பொழுதும்
இல்லா தனவும் இரவே இகழ்ந்துஎவரும்
கல்லாதனவும் கரவு