பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

புகழேந்தி நளன் கதை



4. கருத்து அழகு

ஒரு துறையில் மானும் புலியும் நீர் குடிக்கிறது என்பார் கவிஞர்; மக்கள் பகை இன்றி வாழ்ந்தனர் என்ற கருத்து அறிவிக்கின்றார்.

மாறுபட்ட கோட்பாடு உடையவர்கள் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வது உயர்ந்த பண்பாடு என்பதை அறி வுறுத்த அவர் கூறும் செய்தி கருத்து அழகு கொண்டதாக விளங்குகிறது.

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு

மாதர் அருகிருந்து ஊட்டும் பசுங்கிளியும் கொல்லும் தொழிலை உடைய பருந்தும் ஒரே கூட்டில் வாழ்கிறது. அப்படி வாழ அவன் உலகினைத் தன் குளிர்ந்த வெண்கொற்றக் குடையின் கீழ் செம்மை அறம் விளங்க மக்களைக் காத்து அரசு செய்தான் என்று கூறுகிறார்.

5. மருட்கை அணி

அன்னப் பறவை பொய்கையில் வந்து தோன்றியது என்கிறார் கவிஞர். அப்பொழுது அதன் சிறகு வெண் நிறத்தால் சோலை தன் பசுமை நிறத்தை இழக்கிறது என்றும், பொய்கைத் தலம் அதன் தாள் நிறத்தால் சிவந்தது என்றும் கூறுவது மருட்கை உணர்வினைத் தருகிறது. அதனால் இதனை மருட்கை அணி என்று கூறலாம்.

நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலம்சிவப்ப மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு.